ஒரு ஆசிரியர் வெறும் ஆசானாக மட்டுமில்லாமல், அந்த குழந்தைகளுக்கு தாயாகவும் செயல்பட வேண்டும் என்பதை மிக அழகாக ரசிகர்களுக்கு உணர்த்திய திரைப்படம், தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’.
அந்த படத்தில் டீச்சராக நடித்த ராதிகா பிரசித்தா, தன்னுடைய பாவனைகளாலும், எதார்த்தமான நடிப்பாலும், அந்த கதாப்பாத்திரத்திற்கே உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
ஒரே படத்தில் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த ராதிகா, தற்போது இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடுகு’ படத்தில், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
‘ரஃப் நோட் புரோடக்ஷன்ஸ்’ சார்பில் பாரத் சீனி தயாரித்து வரும் இந்த ‘கடுகு’ திரைப்படத்தில் மீண்டும் கதாப்பாத்திரத்தில் ராதிகா பிரசித்தா நடிப்பது குறிப்பிடித்தக்கது.
இந்தப் படத்தில் நடித்திருப்பது பற்றி பேசிய நடிகை ராதிகா பிரசித்தா, “இரண்டாவது முறையாக நான் டீச்சர் வேடத்தில் நடிப்பதால், ‘குற்றம் கடிதல்’ கதாப்பாத்திரத்தின் சாயல் சிறிதளவும் இதில் இருக்கவே கூடாது என்பதை கவனித்தில் கொண்டோம். அதற்காக எனது உடல் எடையையும் அதிகரித்துள்ளேன். நிச்சயமாக இந்த ‘கடுகு’ படத்தின் டீச்சர் கதாப்பாத்திரம் எந்த வகையிலும் ‘குற்றம் கடிதல்’ டீச்சர் கதாப்பாத்திரத்தோடு ஒத்துப் போகாது.
ஆண் – பெண் இருவரின் உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ளதுதான் இந்த ‘கடுகு’ திரைப்படம். பொதுவாகவே ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே அது காதலாகத்தான் இருக்கக் கூடும் என்ற கருத்து மக்களிடம் இருந்து வருகிறது. ஆனால் அதையும் தாண்டி அவர்களிடையே புனிதமான நட்பும் இருக்கிறது. ‘கடுகு’ படத்தை பார்த்த பின் ரசிகர்கள் அதை நிச்சயம் உணர்வார்கள்…” என்கிறார் ராதிகா பிரசித்தா.










