‘அரவான்’ படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கியிருக்கும் ‘காவியத் தலைவன்’ படம் வரும் நவம்பர் 28, வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா, சிங்கம்புலி உட்பட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்தும், வருண் மணியனும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
காலத்தை வென்ற தமிழின் நாடகக் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் வரும் பீரியட் படம் என்பது பெருமைக்குரியது..
படம் பற்றி நடிகர் சித்தார்த் பேசும்போது, இந்தப் படம் எனது இதயத்திற்கு நெருக்கமானது. இந்தக் கேரக்டராகவே நான் வாழ்ந்துவிட்டேன். ஒரு ரியலான வாழ்க்கையை வசந்தபாலன் படம் பிடித்திருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. இதுவரையில் வெளிவந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, வித்தியாசமான சினிமாவை விரும்பும் ரசிகர்களை இந்த ‘காவியத் தலைவன்’ நிச்சயம் திருப்திப்படுத்தும்..” என்றார்.
‘காவியத் தலைவன்’ படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.