இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ஒரே நேரத்தில், மூன்று மொழிகளில் தயாராகியிருக்கும் படத்தினை உருவாக்கியிருக்கிறது.
தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’ மற்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்று அந்தப் படங்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளைப் பெற்றிருக்கும் இந்த மும்மொழி திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா டக்குபதி நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார். இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், புல்கிட் சாம்ராட் ராணா டக்குபதியுடன் இணைந்து நடிக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களிலும் நடிகைகள் ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோயா உசேன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் இயற்கை எழிலின் மகத்துவத்தையும், போராட்டக் களத்தின் பரபரப்பையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக்குமார். இப்படத்தின் படத்தொகுப்புக்கு புவன் பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகுக்கு ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார்.
ஸ்டண்ட்ஸ் சிவா, ஸ்டன்னர் சாம் இருவரும் இப்படத்தின் அதிரடி சண்டை காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றியிருக்கிறார்கள்.
ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார். ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டியுடன் இணைந்து ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘பிங்க்’, ‘பரிநீதா’, ‘வாசிர்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பெருமைக்குரியவர் இவர்.
இப்படத்தின் சிறப்பு வி.எப்.எக்ஸ். காட்சிகளை ‘லைப் ஆப் பை’, ‘தோர்’ பைமோகேஷ் பக்ஷி’, ‘பிளேன்ஸ்’ ஆகிய படங்களுக்கு பணியாற்றிய பிராணா ஸ்டுடியோஸ் செய்திருக்கிறது.
தமிழ்ச் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமன், இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த மும்மொழி திரைப்படம் உருவாகியிருக்கிறது என்பதால் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்கவகையில் இப்படம் எடுத்துரைக்கிறது.
அசாமின் காசிரங்கா யானைகள் வாழ் உறைவிடத்தில் யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்த துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை சம்பவத்தை இத்திரைப்படம் மையமாக கொண்டிருக்கிறது.
காடுகளையும், அதன் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்வின் அடித்தளத்தை, ஆக்கிரமிப்பு குணங்கொண்ட மனிதர்களின் முயற்சிகள் சீர்குலைக்க முற்படுகையில், காட்டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க முற்படும் போராட்டத்தின் மையப் புள்ளியாக ஒரு தனி மனிதன் எப்படி மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களம்.
படத்தின் இயக்குநரான பிரபு சாலமன் இந்தப் படம் குறித்துப் பேசும்போது, “இந்தப் படத்தை மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக படைப்பதற்கு இந்தக் கதைக் களத்தை நான் தேர்ந்தெடுத்ததன் முக்கிய நோக்கம், காடுகளை ஆக்கிரமிப்பது மனித வாழ்விற்கு ஆபத்தைத்தான் கொடு்ககும் என்பதை வெளிக்காட்டத்தான்.
காடுகளைப் பற்றியும், அதன் நில அமைப்புகள், நீராதாரங்கள், தட்ப வெட்பம், பருவ காலங்கள், அதில் வாழ்கின்ற உயிரினங்கள், தாவர இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை என இவையனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச் சூழல் குறித்த எந்தவொரு அறிதலும் புரிதலும் இல்லாமலே மனிதன் அதை கடந்துப் போவதையும், அதனை வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிப்பதையும் அழிப்பதையுமே வழக்கமாக கொண்டிருக்கிறான். இந்த படம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்கினங்கள் எவ்வாறு மனித வாழ்விற்கு இன்றியமையாததாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும்.
எனவே இப்படம் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளையும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.
மேலும், இந்த விஷயம் மக்கள் மத்தியில் விழிப்புணரச்சியை ஏற்படுத்தும் ஒரு பேசு பொருளாக மாற வேண்டும் என்பதோடு, இதன் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்…” என்றார்.
இந்த மூன்று திரைப்படங்களும் வருகின்ற ஏப்ரல்-2-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.