பரத்-நந்திதா ஜோடியாக நடித்துள்ள ’ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று காலை கமலா தியேட்டரில் நடைபெற்றது.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் இணைந்து ராஜம் புரொடெக்சன்ஸ் சார்பில் இதனைத் தயாரித்து இருக்கிறார்கள்.
டிரைலரை தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட, டைரக்டர் சரண் பெற்றுக் கொண்டார். பாடல்களை டைரக்டர் இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார்.
விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், துணைத் தலைவர் டி.ஜி.தியாகராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் பரத், சிபிராஜ், பிருத்வி, தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, கருணாகரன், நடிகை நந்திதா, டைரக்டர் சரண், பட அதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.எஸ்.சீனிவாசன் ஆகியோர் பேசினார்கள்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பேச்சின் துவக்கத்திலேயே “என் இனிய தமிழ் மக்களே..” என்று சொல்லி ஆரம்பித்தார். இந்த வார்த்தையை இயக்குநர் இமயம் பாரதிராஜாதான் எப்போதும் மேடைகளில் பேசுவார். “என் இனிய நண்பர் பாரதிராஜா இந்த விழாவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. அவர் இந்த மேடையில் இருப்பதாகவே நான் கருதிக் கொள்கிறேன்.. அதனால் அவருக்குப் பதிலாக நான் அந்த வார்த்தையைச் சொல்லிக் கொள்கிறேன்..” என்று அரங்கத்தை கலகலப்பாக்கினார் கே.பாலசந்தர்..!
அவர் மேலும்பேசும்போது, ”பொதுவா குத்து பாடல்களே எனக்குப் பிடிக்காது. ஆனால், ஜனங்கள் ரசிக்கிறார்கள். இந்த படத்தில் 3 குத்து பாடல்கள் உள்ளன. நானும் பார்த்தேன்.. அதைப் பார்த்தபோது, எனக்கே எந்திரிச்சு ஆடலாம் போல் தோன்றியது. அந்த அளவுக்கு இந்தப் படத்துல இசையும், நடனமும் இருக்கு..
தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் இந்தக் கால தலைமுறைக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால், இப்போவெல்லாம் சினிமாவில் குத்து பாடல்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது.
தயாரிப்பாளர்களில் ஆர்.பி.சவுத்ரி, தீவிரமான சினிமா பித்தர். அவர் 86 படங்களை தயாரித்து இருக்கிறார் என்று சொல்வதைவிட, 86 இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்… இது, தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தி தெரியுமா…? இனிமேல் வரக் கூடிய தயாரிப்பாளர்களும் இது போன்ற கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். திரையுலகுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறோம் என்று எல்லா தயாரிப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்…” என்றார்.