‘JULIA’S EYES’ எனும் திகில் திரைப்படம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் கலக்கிய ‘JULIA’S EYES’ திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக வெற்றி பெற்றது.
ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது. ஜூலியா என்னும் ஒரு பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்து விடுகிறாள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தை ஸ்பானிய தயாரிப்பாளரான Guillermo Del Toro தயாரித்தார். தற்போது இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளன.
100-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அனுபவமுள்ள, பிரபல ஒளிப்பதிவாளரான கபீர் லால் இந்த ரீமேக் படங்களை தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார்.
ஒளிப்பதிவாளர் கபீர் லால் ‘பரதேஸ்’, ‘அப்னே’, ‘Welcome Back’ போன்ற இந்தி படங்களிலும், ‘ஆதித்ய 369’, ‘பைரவ தீபம்’ ‘அந்தரிவாடு’, போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் மற்றும் தமிழில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.
தற்போது போல நவீனத்துவம் ஏதும் இல்லாத காலத்திலேயே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல்ஹாஸன்களை ஒரே நேரத்தில் திரையில் காண்பித்தவர் இந்த கபீர் லால்.
இத்திரைப்படம் பற்றி ஒளிப்பதிவாளர் கபீர் லால் பேசும்போது, “மிகவும் சுவாரசியமான திரைக்கதை கொண்டது இத்திரைப்படம். இதை இந்தியாவிற்கும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்ய போகிறேன். பின்னர் பல மொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” என்றார்.