கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடங்களில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவான திரைப்படம் ‘ஜோதி.’
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘போவதெங்கே’ என்ற பாடல் நேற்று S.R.M. மருத்துவக் கல்லூரியில் ஆயிரம் மருத்துவ மாணவ, மாணவியர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி, இயக்குநர் A.V.கிருஷ்ண பரமாத்மா, நாயகி ஷீலா ராஜ்குமார், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, துணை நடிகர் ஹரி க்ரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, ‘Let’s launch Povathengea from JOTHI’ என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது.
“இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது” என்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதன் பின் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று படத்தின் முதல் பத்து நிமிட காட்சி மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. காட்சி நிறைவு பெற்றவுடன் விசில் சத்தம் அரங்கு முழுவதும் நிறைந்திருந்தது. இந்த ஆரவாரம் படம் வெளியான பின்பு, தியேட்டரிலும் மக்கள் மத்தியிலும் நிகழும் என்று எதிர்பார்ப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி பேசும்போது, “சதுரங்க வேட்டை’ படத்தின் தொகுப்பாளராகிய நான் இந்த படத்தைத் தயாரித்தற்கு முக்கிய காரணமே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் ‘சதுரங்க வேட்டை’ படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டதுதான்.
இந்த ‘ஜோதி’ படத்தின் கரு, சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தை தொலைத்தது.
சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கை விட்டது இல்லை. நிச்சயமாக எனக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பிக்கை எனக்குள் வந்தது. இதனால்தான் இந்த ‘ஜோதி’ படத்தை தயாரித்தேன்…” என்றார்.
இயக்குநர் A.V.கிருஷ்ண பரமாத்மா பேசும்போது, “சமூக அக்கறை கொண்ட கதைக் கருவை விறுவிறுப்பான திரைக்கதையுடனும், எதார்த்தமான வசனங்களுடனும் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ‘ஜோதி’ படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது.
இப்படத்தின் முதல் பாடலாகிய ‘போவதெங்கே’ பாடலை மாணவ, மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையில் காணும்படி கேட்டுக் கொள்கிறேன்…” என பேசினார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது. “இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனது சொந்த வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளையும் மிகவும் ஆழமாகவும், அற்தமுள்ளதாகவும் என்னால் அமைக்க முடிந்தது.
இந்த வரிகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் உயிரோட்டமாகவும் அமைந்துள்ளது. படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகளை கண்டு நான் மிரண்டு விட்டேன். இப்படத்தையும், பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பேசும்போது. “அர்ஜுன் ரெட்டி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் போலவே இந்த படமும் பெரிய ஹிட்டாகும்.
இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதில் முதல் பாடலாக இருக்கும் இந்த ‘போவதெங்கே’ பாடலை கார்த்திக் பாடியுள்ளார். இந்தப் படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது இசை கலைஞர்களே கண் கலங்கிவிட்டார்கள். இந்தப் படத்தின் காட்சிகளின் தாக்கம் தங்களுக்குள் நீண்ட நாட்கள் இருக்கும் என்று அனைவரும் சொன்னார்கள்..” என்றார்.
நடிகர் ஹரி க்ரிஷ் பேசும்போது, “இந்த ‘ஜோதி’ படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறேன். இது ரொம்பவும் நல்ல கேரக்டர். படம் வெளியான பின்பு ரொம்பவும் பேசப்படும் கேரக்டராக இது இருக்கும்.
நடிகை ஷீலா ராஜ்குமார் பேசும்போது, “இந்த ஜோதி படத்தை நான் இன்னமும் பார்க்கலை. இப்போதுதான் படத்தோட முதல் பத்து நிமிட காட்சிகளைப் பார்த்தேன். ஸ்கிரிப்ட்ல என்ன இருந்ததோ அதைவிட விஷூவலா பாக்கறப்ப ரொம்ப நல்லா வந்திருக்கு. முழு படத்தையும் இப்பவே பாக்கணும் போல இருக்கு, இயக்குநர் நல்லா இயக்கியிருக்காரு. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் மிக்க நன்றி…” என்றார்.












