ஸ்ரீசிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜெட்லி.’
வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு, மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என எல்லா ஜீவன்களுமே திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறன.
அந்த வரிசையில் இதுவரையிலும் விடுபட்டு போயிருந்த வெள்ளைப் பன்றியை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஜெட்லி.’
உலகளவில் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக ‘ஜெட்லி’ உருவாகிக் கொண்டிருக்கிறது.
முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ் பவன் கனமான வேடத்தில் நடிக்கிறார். மற்றும் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குநர். இசை வெளியீட்டு விழாவன்று கதாநாயகிகளை அறிவிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு – துலிப்குமார், இசை – C.சத்யா, பாடல்கள் – வைரமுத்து, கலை –குருராஜ், சண்டை பயிற்சி – நைப் நரேன், படத் தொகுப்பு – பால்ராஜ், எழுத்து, இயக்கம் – ஜெகன்சாய்.
படம் பற்றி இயக்குநர் ஜெகன்சாய் பேசும்போது, “இந்தப் படத்தில் வெள்ளைப் பன்றியை வைத்து வித்தியாசமான சில விஷயங்களை படமாக்கி இருக்கிறோம்.
இது காமெடி படம் மட்டுமல்ல.. உலக அரசியலை சொல்லும் படம். அண்டை நாடுகள் எதுவும் பக்கத்து நாடுகளின் மீதுள்ள அக்கறையால் மட்டும் அன்புக் கரம் நீட்டுவதில்லை. அவர்களது வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கமே என்பதை இதில் சொல்லி இருக்கிறோம். இதுவரை யாருமே இந்த விஷயத்தை பதிவு செய்ததில்லை.
சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது.
இதே ஸ்ரீசிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் திராவிடன், நயனம் நடிப்பில் ‘இடி மின்னல் புயல் காதல்’ என்ற படத்தை யோகேந்திரன் மகேஷ் இயக்கத்தில் துவக்கவுள்ளது..” என்றார் ஜெகன்சாய்.