திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன. அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்.
அந்த வகையில் ’இத்திக்கர கொம்பன்’ என்கிற மலையாளப் படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியாக உள்ளது.
இப்படத்தை ஸ்ரீலட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர்.
மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு, சுமேஷ், ஸ்ரீஜா போன்ற நடிப்புக் கலைஞர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். அவர் தூத்துக்குடி செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டும் தோற்றத்தில் வருகிறார். அசர வைக்கும் நடிப்பிலும் மிரள வைக்கும் சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார்.
இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது. அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இப்படத்திற்கு பினீஷ் பாலகிருஷ்ணன் – சீனு வயநாடு ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். வீ.கே.பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை தோன்றும் காட்சிகளை அற்புதமாகப் படம் பிடித்துள்ளார்.
சாபு இரன்மல கலை இயக்கத்தையும், ஜான்சன் தாமஸ் படத் தொகுப்பையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளை ஆக்சன் அஷ்ரப் குருக்கள் அமைத்துள்ளார்.
படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே.ராஜு. இவர் பிரபல இயக்குநர் கிருஷ்ணசுவாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பிற்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒரு விறுவிறுப்பான கதையுடன், குழந்தைகளைக் கவரும்படியான, குடும்பத்தினருடன் பார்க்கும்படியான ஒரு திரைப்படமாக இந்த ‘இத்திக்கர கொம்பன்’ படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.









