விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத் திரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் நாயகன் விஷால், விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே.ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன், பெப்சியின் தலைவரான R.k. செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவின் துவக்கத்தில் கிட்னி செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான N.மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடைகளை வழங்கினார்.
இசை விழாவில் விஷால் பேசும்போது, “இந்த ‘இரும்புத் திரை’ என்னுடைய 24-வது திரைப்படம். இந்த டிஜிட்டல் யுகத்தில் ‘இரும்புத் திரை’ எனக்கு முக்கியமான திரைப்படம்.
என்னுடைய தந்தையை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்தப் படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன்.
சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்டு படமெடுத்தால் அது நிச்சயமாக மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும். இதனை மனதில் வைத்துதான் இந்தப் படமும் உருவாகியுள்ளது.
இந்த ‘இரும்புத் திரை’ திரைப்படம் நாட்டின் மிகப் பெரிய ஊழலை பற்றி பேசுகிறது. இந்த மெகா ஊழலை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி, இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன்.
இப்படத்தில் இடம் பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்னுடைய அனைத்து படங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனது ரசிகர்களுக்கும், தமிழகத்து மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி…” என்றார் விஷால்.
இயக்குநரும், பெப்சி அமைப்பின் தலைவருமான R.K. செல்வமணி பேசும்போது, “இங்கே திரையிடப்பட்ட ‘அதிரடி’ பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப்பச்சனை பார்த்தது போல் இருந்தது. விஷால் ஒரு சிறந்த நடிகர். நான் பேசுவதற்கு மேடை 2௦ வருடம் கழித்துதான் எனக்கு கிடைத்தது. இயக்குநர் மித்ரன் பேசுவதை பார்க்கும்போது நன்றாக இருந்தது. இளம் இயக்குநர் நிச்சயம் வெற்றி பெறுவார்…” என்றார்.