பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக வரத் துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ். ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப் பாத்திரங்களாக கொண்டு வெளியாகி, வெற்றி பெற்றும் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் நடிப்பில் ‘IPC 376’ என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது.
பவர் கிங் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் S.பிரபாகர் இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ படங்களில் பணியாற்றிய கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் படத் தொகுப்பாளர் நிர்மல் படத் தொகுப்புப் பணியைக் கவனிக்கிறார்.
ஹாரர், சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என பரபரப்பான வகையில் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன்.
இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள ‘IPC-376’ என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் சட்டப் பிரிவைக் குறிக்கிறது. இப்படி, இப்படத்தின் தலைப்பிலேயே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது. இதுவே இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
‘அட்டக்கத்தி’ படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்து வருகிறார்.
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளது. நான்கு சண்டைக் காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலேயே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளது. சண்டைக் காட்சிகளில் நாயகி நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டபோதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
‘விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக் காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருப்பவர் நந்திதா ஸ்வேதாதான்’ என்ற பேச்சு இந்தப் படம் வந்த பின் தமிழ்த் திரையுலகமெங்கும் ஒலிக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.
ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.