full screen background image

‘இன்று நேற்று நாளை-2’-ம் பாகம் இன்று துவங்கியது..!

‘இன்று நேற்று நாளை-2’-ம் பாகம் இன்று துவங்கியது..!

தமிழில் டைம் மிஷின் பற்றி வெளியான திரைப்படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்தத் திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி வெளியாகியிருந்தது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். டைம் மிஷின் பற்றிய புத்தம் புதிய அறிவியல் சம்பந்தமான கதையில் இப்படம் உருவாகியிருந்ததால் படம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பெற்றது.

இத்திரைப்படத்தின் இயக்குநரான ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நேரத்தில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு வெளியான இந்த ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் துவக்கியிருக்கிறார் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார்.

படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாரே எழுதுகிறார். கார்த்திக் பொன்ராஜ் படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ராஜேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் புதிய படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

Our Score