‘பொன்னியின் செல்வன்’ படம் தயாரிப்பதை சந்தித்த 2 நிமிடங்களில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உறுதி செய்ததாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்தார்.
நேற்று மாலை சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.
விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “செக்க சிவந்த வானம்’ முடிந்த பிறகு அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்..?” என்று சுபாஸ்கரன் கேட்டார். “பொன்னியின் செல்வன்தான்” என்றேன். 2 நிமிடங்கள் யோசித்துவிட்டு உடனே “சரி பண்ணலாம்…” என்றார்.
மேலும், “இப்படம் ராஜமௌலியின் பாகுபலி மாதிரி இருக்குமா..?” என்று கேட்டார். “கண்டிப்பாக இருக்காது” என்று கூறினேன். சரி, “சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி மாதிரி இருக்குமா..?” என்று கேட்டார். “இருக்காது” என்றேன். “வேறு எந்த மாதிரி இருக்கும்..?” என்று கேட்டார். அதற்கு நான், “கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மாதிரி இருக்கும். அது மாதிரியேதான் இருக்க வேண்டும்…” என்று கூறினேன்.
முடிந்தவரை நாங்கள் அதற்காகத்தான் முயற்சி செய்திருக்கிறோம். இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எனக்கு வலுவான ஆதரவாக இருந்தார்கள். இப்படத்திற்காக கமல் சார் குரல் கொடுத்திருக்கிறார். நீங்கள் டிரெய்லரை பார்த்தால் தெரியும்…” என்றார்.









