full screen background image

“தவறைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்” – ஜெயம் ரவியின் பிறந்த நாள் பேச்சு..!

“தவறைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்” – ஜெயம் ரவியின் பிறந்த நாள் பேச்சு..!

தமிழ் சினிமாவின் மூத்த பட தொகுப்பாளரான ராஜாவின் மகன்களான ராஜா மற்றும் ரவி இருவரும் தமிழ் திரையுலகில் அறிமுகமான படம் ஜெயம்’.

முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால், அடுத்தடுத்து அண்ணனின் இயக்கத்திலேயே நடித்து வந்தார் ஜெயம் ரவி. இவர்கள் கூட்டணியில் ரிலீசான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

ஜெயம் ரவி இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோடு அவர் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து கொண்டாடினார் ஜெயம் ரவி. இதற்காக விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் ஜெயம் ரவியின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவரது மனைவி ஆர்த்தி, மகன்கள் மற்றும் குடும்பத்தினரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த விழாவின்போது பத்திரிகையாளர்களின் முன்னிலையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார் ஜெயம் ரவி.

இதில் பேசிய அவர், “நான் நடிக்க வந்து 20 வருடங்களாகி விட்டது. ஆனால், இதுவரையிலும் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். எனக்குப் பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்துவிட்டனர். குவான்டிட்டியைவிட குவாலிட்டி முக்கியம் என்று  நினைத்து செயல்படுகிறேன்.

‘ஜெயம்’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகும் நான் 8 மாதங்கள் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தேன்.  உடனே நான், ‘எதற்கு இப்படி சும்மா உட்கார்ந்திருக்கிறேன்’ என்று யோசித்தேன். உடனே அப்பா சொன்னார், ‘நல்ல படம் உன்னைத் தேடி வரும்வரை சும்மா உட்கார்ந்து இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஹிட் கொடுத்துவிட்டோமே என்று, கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்காதே’ என்று அட்வைஸ் செய்தார். இன்றுவரை அந்த அட்வைசை நான் பின்பற்றி வருகிறேன்.

அதனால்தான் எனது திரைப் பயணத்தில் தோல்விப் படங்களின் சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது. எனது வெற்றிக்கு அதுவே காரணம் என்று நம்புகிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க மட்டுமே ஆசைப்படுகிறேன்.

இத்தனை வருட பயணத்தில் அனைவரிடமும் இருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுள்ளேன். அது எப்படிப்பட்ட கடுமையான விமர்சனமாக இருந்தாலும் சரி, அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் இருக்கிறது.

எனது படங்களில் இருக்கும் நல்ல விஷயங்கள் மற்றும் தவறுகளை தாராளமாக  சுட்டிக் காட்டுங்கள். கண்டிப்பாக என்னை திருத்திக் கொள்கிறேன்…” என்றார்.

Our Score