full screen background image

“ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்” – நடிகர் அதர்வா முரளி பேச்சு!

“ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்” – நடிகர் அதர்வா முரளி பேச்சு!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, ‘#STR49’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, 4-வது படைப்பாக, முழுக்க, முழுக்க இளைஞர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் ‘இதயம் முரளி’ படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. இந்த “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தமிழ்ச் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், நட்டி, தமன், நிஹாரிகா, ரக்சன், திராவிட், ஏஞ்சலின், பிரக்யா நாக்ரா, சுதாகர், யாஷஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர், இயக்குனர் – ஆகாஷ் பாஸ்கரன், இசை – தமன் S, ஒளிப்பதிவாளர் – CH சாய், படத்தொகுப்பாளர் – பிரதீப் இ ராகவ், தயாரிப்பு வடிவமைப்பாளர் – எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார், வசனங்கள் – ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம், பாடல் வரிகள் – விவேக், நடன இயக்குனர் – ஷோபி, ஆடை வடிவமைப்பாளர் – பல்லவி சிங், ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன், போஸ்ட் புரொடக்‌ஷன் மேற்பார்வையாளர் – குணசேகர்.எம், விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன்.

கல்லூரியில் நடந்த விழாவினில் இப்படத்தின் டைட்டில் டீசர் ஒளிபரப்பட்டபோது, ரசிகர்களின் உற்சாக கூச்சல் விண்ணைப் பிளந்தது.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் ‘இதயம்’ முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் படத்திற்கு, இதயம் முரளி தலைப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இப்படத்தில் பங்கு பெற்றுள்ள நடிகர்கள் குழு கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் அவர்களுடன் உரையாடி, பாடல்கள் பாடி, படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் நடிகை ஏஞ்சலினா பேசும்போது, “தொகுப்பாளிணியாக இருப்பதைவிட இப்போது நடிப்பது பிடித்திருக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷுக்கு நன்றி. இப்படத்தின் ஷீட்டிங்கிற்கு நானும் அமெரிக்கா செல்கிறேன் என நினைக்கிறேன். இப்போதுதான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். அதேபோல் படமும் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி..” என்றார்.

 

நடிகர் ரக்‌ஷன் பேசும்போது, “ஆகாஷ் தமிழ் சினிமாவில் புயல் போல நுழைந்து, பெரிய பெரிய படங்கள் செய்து வருகிறார். உண்மையில் அவர் தயாரிப்பாளர் என்பதைவிட இயக்குநர்தான். அவர் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இந்த டீசரே கலக்கலாக இருக்கிறது. படத்தில் நானும் அதர்வாவுடன் அமெரிக்கா செல்வேன். இந்தப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்..” என்றார்.

நடிகை பிரக்யா நாக்ரா பேசும்போது, “இப்படத்தில் அதர்வா முரளி அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது அப்பாவின் புகழ்பெற்ற கதாபாத்திரம் இப்படத்தின் தலைப்பாக அமைந்தது மகிழ்ச்சி. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

நடிகை கயாது லோஹர் பேசும்போது, “தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக, நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். இதுதான் நான் ஒப்பந்தமாகிய முதல் தமிழ்ப் படம், இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக உங்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்..” என்றார்.

பரிதாபங்கள் புகழ் சுதாகர் மற்றும் டிராவிட் பேசும்போது, “ஒன் சைட் லவ் இல்லாத ஆளே கிடையாது, சிலருக்கு ஒன் சைட் லவ் கடைசிவரை ஒன் சைடாகவே இருந்துவிடும். பலர் அந்த கட்டத்தை தாண்டி விடுவார்கள். ஆனால் அந்த உணர்வு அலாதியானது. நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் நாயகனின் நண்பர்களாக வருகிறோம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷ் பிரதருக்கு நன்றி. இந்த ஷீட்டிங் எப்போதும் ஜாலியாக இருக்கும். ஷீட்டிங் எப்போது நடக்கும் என எதிர்பார்ப்போடு இருப்போம். ஆகாஷ் மிகத் திறமையானவர். எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி…” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசும்போது, “இந்த டீம் மிக அற்புதமான டீம். இவர்களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். ஆகாஷ் மிகத் திறமையான இயக்குநர். அவரும் தமனும் சேர்ந்து அட்டகாசமான ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமன் பிரதர் எனக்கு எப்போதும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அதர்வாவுடன் வேலை பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்படத்தில் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி…” என்றார்.

பாடகியும், நடிகையுமான ஜொனிடா காந்தி பேசும்போது, “நான் நடிக்கும் முதல் திரைப்படம் இது. என்னை நடிக்க ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தின் டீசர், மிக அட்டகாசமாக வந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இயக்குநர் ஆகாஷுடன் வேலை பார்க்க ஆவலாக உள்ளேன். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி..” என்றார்.

 

நடிகை நிஹாரிகா பேசும்போது, “இயக்குநர் ஆகாஷுடம்தான் என் நடிப்பு பற்றி கேட்க வேண்டும். டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். இப்படம் நட்பு, காதல் பற்றியது என் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த டீமுடன் வேலை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி…” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசும்போது, “ரசிகர்கள் எனக்கு தந்து வரும் அன்புக்கு நன்றி. இப்படத்தின் கதை பற்றி இப்போது சொல்ல மாட்டேன், உங்களுக்கு நிறைய ஆச்சரியம் உள்ளது. நம்முடைய கல்லூரி காலங்களில் நாம் நிறைய பேரை சந்திப்போம். பல அனுபவங்கள் இருக்கும். அதை ஞாபகப்படுத்தும் படமாக இப்படம் இருக்கும். இந்த டீம் ஃபேமிலி மாதிரி, ஷூட்டிங் மிக ஜாலியாக இருக்கிறது. படம் மிக நன்றாக இருக்கும். நன்றி..” என்றார்.

இசையமைப்பாளர் தமன் பேசும்போது, “நான் நடிப்பேன் என நினைக்கவில்லை. எனக்கு ஜோடி நிஹாரிகா என சொல்லி என்னை இம்ப்ரெஸ் பண்ணிவிட்டார் ஆகாஷ். கௌதம் மேனன், ஜீவா கலந்த கலவையாக ஆகாஷ் உள்ளார். கண்டிப்பாக ஜாலியான படமாக இருக்கும். ரொம்ப நல்ல லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி..” என்றார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசும்போது, “தயாரிப்பைவிட இயக்கம்தான் ஈஸி. சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் அதர்வா பேசும்போது, “ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். ‘இதயம் முரளி’ என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான பெயர். என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் ‘இதயம் முரளி’. என்னுள்ளும் ஒரு ‘இதயம் முரளி’ இருக்கிறான். நம் எல்லோருக்குள்ளும் ஒரு ‘இதயம் முரளி’ இருக்கிறான். அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இது இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி.

ஆகாஷ் மிகப் பெரிய தயாரிப்பாளர். அவரை ஒரு இயக்குநராகத்தான் எனக்குத் தெரியும். இந்தக் கதையை என்னிடம் 2017-ம் ஆண்டே சொன்னார். அப்போது அது நடக்கவில்லை. பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார். அதன் பிறகு “இப்போது இந்தப் படத்தை செய்யலாம்” என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும்.. நன்றி…” என்றார்.

காதலின் மெல்லிய உணர்வுகளை கொண்டாடும் ஒரு படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

 

Our Score