full screen background image

“நானும் அந்தோணி தாசனின் ரசிகைதான்…” – ‘சின்னக் குயில்’ சித்ரா புகழாரம்

“நானும் அந்தோணி தாசனின் ரசிகைதான்…” – ‘சின்னக் குயில்’ சித்ரா புகழாரம்

வாய்ப்பு கிடைக்காத நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வழிகாட்டி தன்னைப்போல உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பிரபல திரைப்பட பின்னணி பாடகரான அந்தோணி தாசன் தொடங்கியுள்ள, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் என்ற புதிய ஆடியோ கம்பெனியின் தொடக்க விழா ஆடல், பாடல், கொண்டாட்டத்தோடு நேற்று மாலை சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் மிக மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

இந்த விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி, சின்னக்குயில்’ சித்ரா,  இசையமைப்பாளர் பாடகர் பிரதீப்குமார், மீடியா மேஷன் நிறுவனத்தின் ரௌஃபா மற்றும் பிரதீபா, கானா பாலா, மாலதி லஷ்மண், கிடாகுழி மாரியம்மாள், நடிகர் அருள்தாஸ், பாடகர்கள் வி.எம். மகாலிங்கம், ஆந்தைகுடி இளையராஜா, ஆக்காட்டி ஆறுமுகம் , வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணி, கனகராஜ், முகேஷ், லெஷ்மி சந்ரு, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட நாடோடிப் பாட்டுக்கு’ பாடலை சிறப்பாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் மற்றும் அவரது குழுவினர், பாடலாசிரியர் லாவரதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சின்னக் குயில்’ சித்ரா பேசுகையில், “அந்தோணி தாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணி தாசனின் ரசிகைதான். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன்.

இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணி மிக நல்ல மனிதர். மிக அன்பான மனிதர். தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக் கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். அந்தோணி தாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

வழக்கமாக இதுபோல நிகழ்ச்சிகளில் நிறைய பேசுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பதால் அனைத்து விருந்தினர்களும் உற்சாகமாக பாடி அசத்த, கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது.

சின்னக் குயில் சித்ராவும் தன் பங்குக்கு, “மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” பாடலைப் பாட அமைதியாக கேட்டு ரசித்தவர்கள் பாடி முடித்ததும் கை தட்டி கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திடீர் விருந்தினராக மேடைக்கு வந்த அந்தோணிதாசனின் மனைவி ரீத்தா அந்தோணி தன் பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார். அதோடு கணவனும், மனைவியுமாக சேர்ந்து ஜோடியாகப் டூயட் பாட, வந்திருந்தவர்கள் சிரித்து ரசித்து ஆரவாரித்தனர்.

கடைசியாக நடிகர் அருள்தாஸ் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து பாடகர்களும் சேர்ந்து, பறை இசையுடன் மொச்சக் கொட்ட பல்லழகி’ பாடலைப் பாட பலத்த கைத்தட்டல் விசில் பறக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

இந்த விழாவில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியீடாக, நாடோடி பாட்டுக்கு’ என்ற பாடலும் வெளியிடப்பட்டது. 

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். 

அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாடல் உருவாக்கவும், நிறுவனம் உதவி செய்யும். பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடலாம்.

அந்தோணி தாசனின் இந்த நல்முயற்சி பெரிய வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

Our Score