இயக்குநர் கே.கிரண்ராஜ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி.’
‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் ரக்க்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் இந்த ‘777 சார்லி’ படத்தினை தயாரித்துள்ளதோடு படத்தின் நாயகனாக ‘தர்மா’ என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ராஜ்.பி.ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி.எஸ்.குப்தா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவையும், படத் தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.
மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் இந்த ‘777 சார்லி படம்’ படமாக்கப்பட்டுள்ளது.
‘சார்லி’ என்ற நாய்க் குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே இந்த ‘777 சார்லி’.
இந்,தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, வரும் ஜூன் 10-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டக்குபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் விநியோகம் செய்கிறார்கள்.
இதையொட்டி இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சக்தி பிலிம்ஸ் நிறுவனத்தின் சக்திவேலன் பேசும்போது, “கார்த்திக் சுப்ராஜ் இந்த படத்தை எனக்கு போட்டு காட்டி “இதை வெளியிட வேண்டும்” என்றார். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்தப் படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்லப் பிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்தப் படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்…” என்றார்.
‘ஸ்டோன் பெஞ்ச்’ கார்த்திகேயன் பேசும்போது, “இந்தப் படத்தை எங்களுக்கு போட்டு காட்டியபோது பிரமித்து போனோம். நானும், கார்த்திக் சுப்புராஜும் படத்தை பார்த்துவிட்டு “எப்படி இப்படியொரு படத்தை எடுத்தார்கள் என தெரியவில்லையே..?” என்று பேசிக் கொண்டோம். திரைப்படங்கள் மீது பெரிய காதல் இருந்தால்தான் இப்படியெல்லாம் படத்தினை உருவாக்க முடியும்.
ஒரு நாயை இப்படி நடிக்க வைத்தது பெரிய சவாலான விஷயம். சார்லியின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. டப்பிங் பணிகளை பார்த்துக் கொண்ட டப்பிங் குழு இதை ஒரு நேரடி தமிழ் படம் போல் உருவாக்கியுள்ளனர்.
நாங்கள் இந்த படத்தை பார்த்தவுடன் இதை வாங்கி வெளியிட விரும்பினோம். எங்களுக்கும் இந்த படம் பெரிய உத்வேகத்தை கொடுத்தது. ரக்ஷித் ஷெட்டி மற்றும், இயக்குநர் கிரணுக்கு வாழ்த்துகள். இந்த ‘777-சார்லி’ படத்திற்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது, “கொரோனாவிற்கு பிறகு, இப்போதுதான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும்.
ரக்ஷித் ஷெட்டி படங்களை முன்பேயே பார்த்துள்ளேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. இந்தப் படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது.
நான் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும். இதில் நான் இருக்க வேண்டும் எனவும் விரும்பினேன். இந்தப் படத்தின் வெற்றி மீது நான் மிக உறுதியாய் இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய திருப்தியை கொடுத்த படம்.
இயக்குநர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். ‘இறைவி’ படத்தில் நாய் காட்சியை படமாக்க முடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை
இந்தப் படத்தின் கதை நிச்சயமாக சொல்லப்பட வேண்டிய கதைதான். இந்த படத்தைப் பார்த்த பின்னர் அனைவருக்குமே, அவரவர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை…” என்றார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “தற்போது இந்தத் திரையுலகத்தில் நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தைவிட படத்தில் பணியாற்றிய நாய், படக் குழு மற்றும் இயக்குநருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இயக்குநரின் ஆர்வம்தான் இந்தப் படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன். ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்.
இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. இந்த ‘777 சார்லி’ படம் ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்த படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களை தவறவிடவே மாட்டார்கள்.
இந்தப் படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரக்ஷித் சாருடைய அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். இந்த ‘777 சார்லி’க்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்றார்.
நடிகர் ரக்ஷித் ஷெட்டி பேசும்போது, “இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு. இந்த ‘777 சார்லி’ படம் என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே படம் முடிந்துவிட்டது.
நான்தான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளேன். அதனால் படத்தை ஒடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு முதலில் இருந்தது. நான் படத்தை முழுமையாக பார்த்த பிறகு, என்ன நடந்தாலும் சரி.. இந்தப் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன்.
படத்தைப் பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலை மதிப்பற்றது. எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்கு தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்த படத்தில் இருக்கிறது.
ஒட்டு மொத்தக் குழுவும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச். ஸ்டோன் பெஞ்ச் எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும். அவர்களுடன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு வேண்டும்..” என்றார்.
இயக்குநர் கிரண்ராஜ் பேசும்போது, “நான் செல்லப் பிராணிகளின் விரும்பி. அதனால்தான் இந்தக் கதையை தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் என தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் இந்த படத்தை துவங்கினோம்.
ரக்ஷித் ஷெட்டி கதையை கேட்டு, “நாம் கண்டிப்பாக இந்தப் படத்தை செய்வோம்” என கூறினார். “பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு” என ரக்ஷித் ஊக்கமளித்தார். இந்தக் கதையில் எனக்கு இருந்த தெளிவு, தயாரிப்பாளருக்கும் இருந்தது.
நடிகர்கள் ரக்ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்தப் படத்துக்காக கொடுத்துள்ளனர். இந்த படத்தில் நடித்த நாய்(சார்லி)யை தேர்ந்தெடுக்க நாங்கள் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தோம். பின்னர் பல நாட்கள் கழித்துதான் இந்த நாயை கண்டு பிடித்தோம்.
கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை தமிழில் வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது.
டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிக திறமையானவர்கள். தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாக பேசியுள்ளார். இந்தப் படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்றே சொல்ல மாட்டீர்கள். நேரடி தமிழ் படம் என்றுதான் சொல்வீர்கள். எங்களது படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த ‘777 சார்லி’ படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.