Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ராஜா பேசும்போது, “செந்தூர் பிலிம்ஸின் 7-வது திரைப்படம் இது, கோடியில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைக் குவித்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தப்படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும். இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் அற்புதமான இசையைத் தந்துள்ளார்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். இப்படத்தை முன்பே வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தோம், ஆனால், விஜய் ஆண்டனி சாருக்கு எதிர்பாராவிதமாக விபத்து நடைபெற்றது. யாராயிருந்தாலும் ஒரு வருடம் வர மாட்டார்கள், அதைத் தாண்டியும் அவர் ஒரு மாதத்தில் வந்து எங்களுக்காக நடித்தார். ரிலீஸ்வரை, பிஸினஸ் முதற்கொண்டு உறுதுணையாக இருந்தார். இயக்குநர் தனா மிகக் கடினமான உழைப்பாளி, அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். கௌதம்மேனன் சார் எங்களுக்காக வந்து நடித்துத்தந்தார். படம் மிக நன்றாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி..” என்றார்.
பாடலாசிரியர் கு.கார்த்திக் பேசும்போது, “இப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தந்த, இசையமைப்பாளர், இயக்குநருக்கு என் நன்றிகள். எனக்கு நிறையப் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு தரும் விவேக் மெர்வினுக்கு நன்றிகள். என் பாடலை விஜய் ஆண்டனி சார் பாடியிருப்பது எனக்குப் பெருமை, இப்படிப்பட்ட மிகச் சிறந்த குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி..” என்றார்.
இயக்குநர், நடிகர் தமிழ் பேசும்போது, “தயாரிப்பாளர் ஒரு ஹீரோவைப்பார்த்து மாமனிதன் எனச் சொல்கிறார் என்றால், அவர் எத்தனை நல்லவராக இருக்கிறார் என்பது புரிகிறது. விஜய் ஆண்டனி சார், எப்போதும் தயாரிப்பாளரின் ஹீரோவாக இருக்கிறார். எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள் சார், இயக்குநர் தனா தனக்கு என்ன வேண்டுமோ, அதைத் தெளிவாக எடுத்து விடுவார், எனக்கு இப்படத்தில் நல்ல ரோல் தந்துள்ளார். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி..” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, “இயக்குநர் தனா மணிரத்னம் சாரிடம் இருந்து வந்தவர். இவரிடம் ரைட்டிங் இன்னும் பலமாக இருக்கும். படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையில் விவேக் மெர்வின் நல்ல பாடல்கள் தந்துள்ளார்கள். விஜய் ஆண்டனி சார் எப்போதும் கதைக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கிறார், அதனால்தான் எல்லா இயக்குநருக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார். கௌதம் மேனன் சார் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் மாதிரி திரையில் ஸ்டைலாக நடிக்க ஆசை. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது, “தனா சாருக்கும், ராஜா சாருக்கும் நன்றி. ஒரு நாள் போன் செய்து, இந்த மாதிரி ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டுமெனக் கேட்டார்கள், நானும் சரி எனச் சொல்லிவிட்டேன், ஆனால் பிருந்தா மாஸ்டர் பாட்டு கேட்டீர்களா எனக் கேட்டார், அப்போதுதான் பாட்டு கேட்டேன். ஸ்பீட் சாங். நிறைய பீட் இருந்தது. எனக்குப் பயமாக இருந்தது. தனா சார் தைரியம் தந்து ஆட வைத்தார். இந்தப் பாடல் கண்டிப்பாகப் பிடிக்கும். படம் அருமையாக எடுத்துள்ளார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.
பாடலாசிரியர் கிருத்திகா பேசும்போது, “இயக்குநர் தனா எனக்கு நெருங்கிய நண்பர். எனக்கு போன் செய்து, ஒரு ஐட்டம் சாங் எழுதணும் என்றார். ஒரு பெண்ணிடம் கூப்பிட்டு, ஐட்டம் சாங் விரசமில்லாமல் எழுதச் சொல்வதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன். உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி..” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் முரளி பேசும்போது, “தயாரிப்பாளர் ராஜா சார், இயக்குநர் தனா இருவருக்கும் நன்றி. எனக்கு இந்தப் படத்தில் உறுதுணையாக இருந்து, ஆக்சன் காட்சிகளை நன்றாகச் செய்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. எனக்கு ஆதரவாக இருந்த ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர் இருவருக்கும் நன்றிகள். கௌதம் மேனன் சார் படத்தில் வேலை உதவியாளனாகப் பார்த்திருக்கிறேன், அவரை இந்தப்ப டத்தில் வேலை வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி..” என்றார்.
கலை இயக்குநர் உதயகுமார் பேசும்போது, “செந்தூர் பிலிம்ஸில் எனக்கு இது மூன்றாவது படம். ராஜா சார் எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார் நன்றி. என் குரு கதிர் சார்தான் இந்தப் படம் செய்வதாக இருந்தது. கதை கேட்டேன். பிரம்மாண்டமாக இருந்தது. இயக்குநர் கேட்டதை, இந்தப் படத்தின் கலர் பேலட்டுக்கு ஏற்றவாறு செய்து தந்தேன். முதல் நாளே பாராட்டினார். இயக்குநர் நல்ல ஆதரவு தந்தார். அனைவருக்கும் நன்றிகள்..” என்றார்.
எடிட்டர் சங்கத்தமிழன் பேசும்போது, “வானம் கொட்டட்டும் படத்திலிருந்து, தனாவுடன் வேலை செய்து வருகிறேன். மிக நல்ல நண்பர். மிகச் சிறந்த இயக்குநர். எனக்குப் பிடித்த நடிகர் விஜய் ஆண்டனி. அவர் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கௌதம் மேனன் சார் கேரக்டர். இந்தப் படத்தில் ரொம்ப நன்றாக இருக்கும். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி..” என்றார்.
இசையமைப்பாளர் மெர்வின் பேசும்போது, “இந்த ஹிட்லர் எங்க ரெண்டு பேருக்கும் மிக முக்கியமான படம், விவேக் முக்கிய வேலையால் வர முடியவில்லை. இப்படி ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் எங்களைத் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநருக்கு நன்றி. படம் ஆரம்பித்த முதல் நாளே, எங்களை பாராட்டி ஊக்கம் தந்த, தயாரிப்பாளர் ராஜாவுக்கு நன்றி. படத்தை முடித்து, படம் திருப்தியாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் ஆண்டனி சார் அருமையாக நடித்துள்ளார். கௌதம் மேனன் சார் ரசிகன் நான், அவர் இந்தப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் தியேட்டரில் பார்த்து ரசிக்கும்படியான ஆக்சன் கமர்ஷியல் படமாக இருக்கும். நன்றி..” என்றார்.
நடிகை ரியா சுமன் பேசும்போது, “இந்தப் படம் மனதுக்கு மிக நெருக்கமான முக்கியமான படம். எனக்கு மிக நல்ல ரோல் தந்த தனா சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி சார் எப்படி இப்படி முழுக்க பாஸிடிவிடியுடன், நல்ல மனிதராக இருக்க முடியுமென ஆச்சரியப்பட்டுள்ளேன். இப்படத்தில் உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி. கௌதம் சார் படங்கள் அவ்வளவு பிடிக்கும் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படத்தில் உடன் நடித்த, மற்றும் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.
இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “இந்தப் படம் பண்ண ரெண்டே காரணம்தான். தனா, அவர் விஜய் ஆண்டனி நீங்கள்தான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டார் என்று சொன்னார். பொதுவாக நான் நடிக்கத் தயங்குவேன். எனக்கு இந்தப் படத்தில் அவ்வளவு கம்பர்டபிளாக வைத்துக் கொண்டார்கள். விஜய் ஆண்டனி ஆசைப்பட்டதால்தான் இந்தப் படத்தில் நடித்தேன் நன்றி. இந்தப் படத்தில் மிகப் பெரிய கதை இருக்கிறது, அதை தனா இயக்கியவிதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய் ஆண்டனி விபத்தைத் தாண்டி ஒரே மாதத்தில் நடிக்க வந்தது வியப்பாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இப்படம் இருக்கும்..” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “கௌதம் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முன்பு அவர் படத்தில், இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன், இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச் சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார். ரியா உங்களின் ‘மன்மத லீலை’ படம் பார்த்தேன், அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது. வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக் கொண்டு பேசுவது, ஆச்சரியமாக இருக்கிறது.
விவேக் மெர்வின் ரசிகன் நான், உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், விவேக் பிரசன்னா எல்லாம் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்சன் படமாக இப்படம் இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி..” என்றார்.
இயக்குநர் தனா பேசும்போது, “இந்தப் படம் ஒரு நல்ல ஆக்சன் படம். ஒரு பக்கம் விஜய் ஆண்டனி சார், இன்னொரு பக்கம் கௌதம் மேனன் சார் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் அவர்கள் தந்த ஒத்துழைப்பில்தான், இந்தக் கதையைச் சிறப்பாகச் செய்தேன். ராஜா சார் மிகப் பெரிய ஒத்துழைப்பு தந்தார். நடிகர்கள் மற்றும் குழுவினர் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் கம்ர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும்..” என்றார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.









