full screen background image

“காதல் காட்சிகளில் நல்லா நடிச்சிருக்கார்…” – ஹீரோ பற்றி ஹீரோயின் கொடுக்கும் சான்றிதழ்..!

“காதல் காட்சிகளில் நல்லா நடிச்சிருக்கார்…” – ஹீரோ பற்றி ஹீரோயின் கொடுக்கும் சான்றிதழ்..!

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி தயாரித்துள்ள திரைப்படம் ‘கோலிசோடா-2’.

படத்தில் சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகிறது.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படமான இந்த ‘கோலி சோடா- 2’-வில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சுபிக்ஷா நடித்திருக்கிறார்.

அழகான தோற்றத்தில், அடுத்த வீட்டு பெண் போன்று கூடுதலாக சரளமாக தமிழ் பேசும் திறமையுடனும் இருக்கிறார் சுபிக்ஷா.

ஏற்கெனவே ‘கடுகு’ படத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் நம் கவனத்தை ஈர்த்த சுபிக்ஷா, இப்போது விஜய் மில்டன் மற்றும் பாரத் சீனியுடன் இந்த ‘கோலிசோடா-2’ படத்திற்காக இணைந்ததில் சந்தோஷமாக இருக்கிறாராம்.

‘கோலிசோடா-2’ படம் பற்றி நடிகை சுபிக்‌ஷா பேசும்போது, “கடுகு’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை கடுகு சுபிக்‌ஷா என்று அழைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது,

மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும்  என நான் எதிர்பார்க்கவேயில்லை.  

படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும்போது விஜய் மில்டன் சார், ‘இயல்பாக நடித்தாலே போதும். எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவையில்லை’ என்றார்.

இந்தப் படத்தில் நடிகர் பாரத் சீனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். கடந்த முறை ‘கடுகு’ படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொன்னேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார்போல,! ‘கோலி சோடா-2’ படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்‌ஷன் காட்சிகளைவிட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்…” என்றார்.

ஏற்கனவே வெளியான படத்தின் ப்ரோமோ காட்சிகளில் சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்றியிருக்கிறது. இசையமைப்பாளர் அச்சு இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார், குறிப்பாக ‘பொண்டாட்டி’ பாடல் ‘கோலி சோடா’ படத்தின் சுவையை கொண்டு வந்திருக்கிறது என்கிறார்கள் இசை ரசிகர்கள்.

Our Score