எப்பொழுதும் தேசப் பற்றினை பறைசாற்றும் படம் என்றாலே மக்கள் மத்தியில் ஆதரவுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இம்மாதம் 17-ம் தேதி வெளிவர இருக்கிறது ‘காஸி’ என்றொரு திரைப்படம்.
நம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப் பற்றைப் பற்றியும் பேசி வெளிவந்துள்ள பல படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்தக் கால ‘கப்பலோட்டிய தமிழன்’ தொடங்கி ‘1921’, ‘ஜெய்ஹிந்த்’. ‘மதராசப்பட்டினம்’, ‘லகான்’வரை ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தேசம் பற்றிப் பேசியவை.
அந்த வகையில் ஒரு படமாக இந்த ‘காஸி’ படமும் உருவாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் அடிப்படையில் படக் கதை உருவாகியிருக்கிறது.
எதிரி நாடு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நம் நாட்டின் மீது போர் தொடுக்கிறது. அதை நம் நாட்டு வீரர்கள் எப்படி எதிர்கொண்டு எதிர்க்கிறார்கள்…? எதிரிகளிடமிருந்து அவர்கள் எப்படி நம் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த ‘காஸி’ படத்தின் கதைக் களம்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். டாப்சிதான் கதாநாயகி. இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் போன்ற அனுபவ நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.
சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை பி.வி.பி. சினிமா நிறுவனம் மேட்டினி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.
நீர் மூழ்கி கப்பல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளன. கடலில் எடுக்கப்பட்டவை மட்டுமல்ல… படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தைத் தரும் என்கிறது படக் குழு.
படத்தின் தணிக்கை முடிந்து விட்டது. ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. படம் இந்த மாதம் 17-ம் தேதி வெளியாகிறது.
தேசம் பற்றிப் பேசும் இப்படம் மொழி எல்லை கடந்தது அல்லவா..? இந்த ‘காஸி’ திரைப்படமும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.