திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகரான G.V. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள் விழா, இன்று அவருடைய சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவில் G.V. பிரகாஷ் கலந்துகொண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
விழாவில் 10 கிலோ கேக் வெட்டப்பட்டது. ரசிகர்கள் அவருக்கு ஆளுயர மாலை, தலைக் கிரீடம் , வெள்ளி வாள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் உள்ள ‘காக்கும் கரங்கள்’ சிறுவர்கள் காப்பகத்திற்கும், சென்னை ஓட்டேரியில் உள்ள ‘ஆஷா நிவாஸ் பாய்ஸ் ஷெல்டர் ஹோமி’ற்கும் இரவு உணவு சென்னை மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட ஜி.வி.பிரகாஷ், தான் தனது ரசிகர்களுக்காக ரசிகர் நற்பணி மன்றத்தைத் துவக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து G.V. பிரகாஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது இதுதான்.
“என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என இணைய மூலைகளில் பரவி கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றவே இந்த நற்பணி மன்றத்தைத் துவக்கினேன்.
இந்தியாவின் மிகப் பெரிய சக்தி இளைஞர் சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த சின்ன வயதில், எனக்கான பேர், புகழ் எல்லாவற்றையும் கொடுத்தது இந்தத் தமிழ்ச் சமூகம். அதுக்கு நான் என்னால முடிந்ததை திருப்பி கொடுக்கணும்னு நினைக்குறேன்.
ரசிகர் மன்றம்னு சொன்னாலே இங்க தப்பா பார்க்கப்படுது. நிச்சயமா நம்மை நேசிக்கின்ற இளைஞர்களை வைத்து இங்கு ஆக்கப்பூர்வமான பல செயல்களை செய்ய முடியும். அதற்கு உதரணமா கமல் சார் மற்றும் சூர்யா சார் நற்பணி மன்றங்கள் இருக்கின்றன. அவர்களின் பாதையில்தான் நானும் பயணிக்க விரும்புகிறேன். புதிய மன்றம் தொடங்க நினைக்கும் ரசிகர்கள், 9003687202 என்ற எண்ணிலோ gvpfansclub@gmail.com என்ற மின் அஞ்சலிலோ என்னைத் தொடர்பு கொள்ளலாம்..”
என்று கூறியிருக்கிறார்.
என்ன திடீர்ன்னு அண்ணன் களத்துல குதிச்சிட்டாருன்னு நினைக்குறீங்களா..? பிரகாஷ் அண்ணன் இப்போ ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் கோதாவிலும், அழகாக இருக்கின்ற தைரியத்திலும், பணம் இருக்கிற தெம்பிலும் 2 படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். படம் வெளிவரும்போது உதயநிதிக்காக தியேட்டர்களில் பேனர் கட்டி, ‘தலைவா வா.. தலைமையேற்க வா’ என்று அழைக்க தி.மு.க. தொண்டர்கள்கூட ஓடி வருவார்கள்.. ஆனால் ஜி.வி.பிரகாஷிற்கு..?
இதனால்தான் அண்ணன் பிரகாஷ் யோசித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். ரசிகர் மன்றங்களைத் துவக்க அனுமதித்தால் தியேட்டர் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்வார்களே..? கூட்டத்தைக் கூட்டும் ஒரு மனோபாவம் பிரகாஷ் என்ற நடிகருக்காக வளருமே..? அதற்காகத்தான் இத்திட்டம்..! சூப்பர் ஐடியாண்ணே..!
உண்மையாகவே கமல், சூர்யா போல தனது நற்பணி மன்றம் போல பிரகாஷின் ரசிகர் நற்பணி மன்றமும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்தால் நமக்கும் சந்தோஷம்தான்.. கூடவே அவர்களது புதிய தலைவர் பிரகாஷையும் பார்த்துக் கொள்ளட்டும்.. யார் வேண்டாம் என்பது..?
அடுத்த கனவென்ன, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையா..? இதான பயமாயிருக்கு..???