சென்ற ஆண்டில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளரான V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா ஆகிய ஆறு சிறுவர், சிறுமிகள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘சின்னக் கலைவாணர்’ விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், படத் தொகுப்பு – கார்த்திக் ராம், இசை – கணேஷ் சந்திரசேகர், பாடல்கள் – பா. விஜய், மோகன் ராஜ், தமிழணங்கு, சண்டை பயிற்சி – ‘மிராக்கிள்’ மைக்கேல் ராஜ், கலை – S.ராம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – V.P.விஜி, தயாரிப்பு – வையம் மீடியாஸ்.
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
விஸ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள்.
வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஸ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஸ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.
இந்த ஐந்து சிறுவர்களும் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி எப்படி சாதிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தில் இடம் பெற்றிருக்கும் கடுமையான சண்டை காட்சிகளில் ஐந்து சிறுவர்களும் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.