’பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன்.ஜி, அவர் இயக்கிய ‘திரெளபதி’ படம் மூலம் மிகப் பெரிய சர்ச்சை இயக்குநராக உருவெடுத்தார்.
இதையடுத்து அவர் இயக்கிய ’ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’ படங்களும் சில சர்ச்சைகளுக்குள் சிக்கினாலும், வியாபார ரீதியாக வெற்றிப் படங்களாக அமைந்தன.
இப்போது இந்த ‘திரெளபதி’ படத்தின் தொடர்ச்சியை ‘திரெளபதி-2’ என்ற தலைப்பில் மோகன்.ஜி இயக்கியிருக்கிறார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் சோலா சக்கரவர்த்தி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜி.மோகனின் ஆஸ்தான நடிகரான ரிச்சர்ட் நாயகனாக நடிக்க நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் மோகன்.ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் பிலிம் ராஜ் சுந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநரான மோகன்.ஜி, படம் பற்றிப் பேசும்போது, “நான் இயக்கிய ’திரெளபதி’ படத்தின் தொடர்ச்சிதான் இந்த ‘திரெளபதி 2’. முதல் பாகத்தின் ஹீரோவின் பூர்வீக வரலாறு பற்றிய கதைதான் இத்திரைப்படம். அது எப்படி 14-ம் நூற்றாண்டுக்கு செல்கிறது என்பதைப் பற்றிதான் இந்தப் படம் பேசுகிறது.
இது முழுக்க, முழுக்க ஒரு வரலாற்று உண்மையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ‘அன்னல்கண்டா’ என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய ஒரு வரலாற்று புத்தகத்தை மையமாக வைத்துதான் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறோம்.
படத்தில் இடம் பெறும் பல சம்பவங்கள் உண்மை சம்பவங்கள்தான். சிலவற்றை கற்பனையாக சொல்லியிருக்கிறேன். அதுவும்கூட “இப்படி நடந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..” என்ற கற்பனையில்தான் கதையில் சொல்லியிருக்கிறேன்.
நமக்கு சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிதான் தெரியும். ஆனால், அவர்களுக்குப் பிறகு தென்னிந்தியா முழுவதையும் ஆண்ட ‘கொய்சாலர் மன்னர்’களைப் பற்றித் தெரியாது. கர்நாடகாவை தலைமையாக கொண்டு தென்னிந்தியா முழுவதும் 80 பாளையங்களை ஆதிக்கம் செலுத்தி ஆண்டார்கள் ‘கொய்சாலர்கள்’.
அதில் ஒரு பாளையத்தை ஆண்டவர்தான் வல்லாள மகாராஜா பரம்பரையினர். இந்தப் பரம்பரையில் வந்த மூன்றாம் வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார். இப்போதும் திருவண்ணாமலை கோவிலில் அவர் வடிவமைத்த கிளி கோபுரம் ஒன்று இருக்கிறது. கோவில் அருகில் அவருக்கு சிலையும் இருக்கிறது. இன்றைக்கும் அங்கு அவருக்கு வருடாவருடம் விழா நடக்கிறது.
வல்லாள மகராஜாவுக்கு கீழ் ஆட்சி செய்தவர்கள்தான் காடவராயர்கள், அவர்கள் விழுப்புரத்தை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. அவர்களைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.
இந்தக் கதைக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டேன். பல வரலாற்று ஆசிரியர்களை சந்தித்து, அவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், பல ஆதாரங்கள் அடிப்படையிலும் சுமார் ஒரு வருடமாக இந்தப் படத்துக்காக திரைக்கதை எழுதினேன். இதுவரை சொல்லப்படாத மற்றும் மக்கள் அறிந்திராத வரலாற்றை பேசும் படமாக இந்தப் படம் இருக்கும்.
இத்திரைப்படம் பல்லவர்கள் ஆட்சியின் வரலாற்றை சொல்லும் ஒரு படைப்பாகவும் இருக்கும். அப்போது சுல்தான்கள் இங்கு வந்து என்ன செய்தார்கள்..? அவர்கள் படையெடுப்பின் நோக்கம் என்னவாக இருந்தது..? அவர்களை காடவராயர்கள் எதற்காக எதிர்த்தார்கள்…? எப்படி இவர்களை எதிர்கொண்டார்கள் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது.
படத்தில் நாயகன் ரிச்சர்ட் வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நட்டி நட்ராஜ், மூன்றாம் வல்லாள மகராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சம்புவராயர்கள் குறித்தும் சிறிது பேசியிருக்கிறேன். சம்புவராயர் வேடத்தில் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார்.
இந்தக் கதையை படமாக எடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.. அது என்ன என்பதை இப்போது சொல்லமாட்டேன். அடுத்தடுத்த சந்திப்புகளில் சொல்கிறேன். இப்போது சொன்னால் படம் குறித்து தேவையில்லாத சர்ச்சைகள் எழும்..” என்றார்.
தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி படம் குறித்து பேசும்போது, “என்னுடைய சக்திக்கு மீறிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறேன். இயக்குநர் மோகன்.ஜி மற்றும் அவரது குழுவின் கடுமையான உழைப்பால் 31 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதோடு, தமிழ் சினிமாவில் முக்கியமான படமாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ்சுந்தர் பேசும்போது, “படத்தில் மொத்தம் ஏழு சண்டைக் காட்சிகள் இடம் பெறுகிறது. படம் முழுவதும் இரண்டு கேமராக்களை கொண்டு படமாக்கினோம். போர் காட்சிகளில் மூன்று கேமராக்களை பயன்படுத்தினோம். அனைத்தும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. வரலாற்று கதையாக இருந்தாலும், பீரியட் கலர் டோன் பயன்படுத்தாமல், பலவித வண்ணங்களை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால், ஒரு விளம்பரப் படத்தை பார்க்கும் அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.” என்றார்.
”திரெளபதி’ படத்தில் நடித்ததை கெட்ட கனவாக பார்க்கிறேன்” என்று அப்படத்தின் நாயகி ஷீலா கூறியது ஏன்?”, “இந்தப் படத்தில் சின்மயி ஒரு பாடலைப் பாடிவிட்டு அதை விமர்சனமும் செய்தது ஏன்..?” என்ற கேள்விகளுக்குப் பதிலளித்த இயக்குநர் ஜி.மோகன், “பாடகி சின்மயி பாடிய பாடல் படத்தில் இடம் பெறாது.. ஷீலா மற்றும் சின்மயி இருவரின் விமர்சனங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்..? அவர்கள் இப்படி பேசுவது ஏன்..? என்பதற்கான உண்மைகளை இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொல்கிறேன்..” என்றார்.
தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாதம் இந்த ‘திரெளபதி-2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.









