தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 64 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்தார்கள். இதற்கான பத்திரங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நேரில் வழங்கினார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு இது :
“மனித உடல் இறந்த பின் எரிக்கப்படும். அல்லது புதைக்கப்படும். இப்படி எந்தப் பயனும் இல்லாமல் போகும் உடலை மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தி பல நோய்களை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் உருவானதுதான் உடல் தானத் திட்டம்.
இந்த உடல் தானத் திட்டத்தில் நமது தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டுமென்ற பேராவலுடனும், மரணத்திற்கு பின் அரசு பொது மருத்துவமனைக்கு அவர்களது உடலை தானமாக கொடுக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு செய்தி, தமிழகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன்படி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் 62 பேர்கள், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர்கள், என மொத்தம் 64 பேர்கள் தங்களுடைய உடலை தானமாக அளித்துள்ளார்கள்.
இதற்கான உறுதிப் பத்திரங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் அளித்து, வாழ்த்து பெற வேண்டும் என்ற மனுவினை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் வழங்கினார்.
அதன்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் இயக்குநர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 64 பேர்களின் தன்னார்வ உடல் தானத்திற்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி, வாழ்த்து பெற்றனர்.”
இவ்வாறு அந்தச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.