full screen background image

இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் புதிய படம்

இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் புதிய படம்

‘அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’, ‘விசிறி’ போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஒன்று, முன்னணி நிறுவனம் தயாரிக்க ‘விடுதலை’ நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றி வீரன் மகாலிங்கம்.

இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசும்போது, “சூரியும் நானும் பால்ய கால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம். பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும்.

‘விடுதலை’ படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விசயத்தைச் சொல்லிகிட்டே இருப்பார். காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனா நடிக்கிறத எப்படி. ஏத்துக்கப் போராங்கன்றத நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா’ ன்னு சொல்லிகிட்டே இருப்பார்.

இப்போ, ‘விடுதலை’ ட்ரெய்லர் வந்த பிறகு கிடைக்கிற ரெஸ்பான்ஸைப் பார்கிறப்போ மகிழ்ச்சியா இருக்கு. வெற்றிமாறன் சாரோட உழைப்பு அபாரமானது. இந்நிலையில் சூரியின் அடுத்த படத்தில் நான் கதை, திரைக்கதை எழுதி இருப்பது தனக்கும் ஒரு நண்பனாக இரட்டிப்பு மகிழ்ச்சி” என்றார்.

தெளிவான பார்வையுடன் சொல்லப்பட்ட கதை ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் படமாக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், தனது அடுத்த கட்ட பயணத்திற்கான பாதை சரியானதுதான் என்று நம்பிக்கை வந்திருக்கிறது எனவும் சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து தனது, ‘மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் புதிய படத்தைத் தயாரித்து இயக்குகிறார் மகாலிங்கம்.

‘அருவி’, ‘கர்ணன்’, ‘கொரில்லா’ மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தற்சமயம் ‘துணிவு’, ‘அயலி’ (வெப் தொடர்), ‘அயோத்தி’ போன்ற வெற்றி படைப்புகள் வழியாக மக்களின் ஆதரவை பெற்று வரும் ‘அருவி’ மதன் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க, ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்தப் படம் பற்றி இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் பேசும்போது, “நான் ஏற்கெனவே இயக்கிய மூன்று படங்கள் மூலம் சில அனுபவங்களைப் பெற்றுள்ளேன்,. அந்த அனுபவத்தின் துணையோடு நல்ல சினிமாவை மக்கள் கொண்டடியே தீருவார்கள் என்ற முழு நம்பிக்கையுடனும், புது வெளிச்சத்தோடு இப்போது களத்திற்கு திரும்பவும் வந்திருக்கிறேன். 

இது முழுக்க, முழுக்க நகரம் சார்ந்த பின்னணிக் கதை. எனது அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் சுவாரசியமான உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாகியிருக்கிறது.  20 நாட்களில் முழு படத்தையும் முடிக்கும் திட்டத்துடன் பணியை தொடங்கியிருக்கிறேன்.

கதையின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிப்பில் முத்திரை பதித்த நட்சத்திரங்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். மற்ற நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்..” என்றார் இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம்.

Our Score