ஜெயம் ரவி – ஹன்ஸிகா மோத்வானி ஜோடியாக நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘டண்டணக்கா’ என்று துவங்கும் பாடலில் தன் அனுமதியில்லாமல் தனது குரலைப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கேட்டு கோர்ட்டிற்குச் சென்றுள்ளார் திரையுலக அஷ்டாவதனி டி.ராஜேந்தர்.
இந்தப் படத்தில் ‘டண்டணக்கா’ என்று துவங்கும் பாடலை பாடலாசிரியர் லோகேஷ் எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘அனேகன்’ திரைப்படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ‘டங்காமாரி ஊதாரி’ பாடலை எழுதியவர். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். பாடலை இன்னொரு இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார்.
‘‘டண்டணக்கா…ணக்கா… ணக்கா’
எங்க தல டீயாரு
சென்டிமென்ட்ல தாறுமாறு
மைதிலி என்னைக் காதலின்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ணச் சொன்னாரு
மச்சான் – அங்கதான்டா
எங்க தல நின்னாரு…’’
என்று துவங்கும் இந்தப் பாடலின் துவக்கத்தில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து இமிடேட் செய்திருக்கிறார்கள். மேலும் படத்தின் பின்னணியிலும் டி.ராஜேந்தர் பேசும் வசனம் அவரது குரலிலேயே ஒலிக்கிறதாம். இது எதற்கும் டி.ராஜேந்திரிடம் முறைப்படி அனுமதியே வாங்கவில்லையாம்.
இதனால் கோபமான டி.ஆர். வக்கீல் நோட்டீஸ் விடப் போகிறேன் என்று இந்தப் பாடல் வெளியான சில நாட்களிலேயே போர்க்கொடி தூக்கினார். தனது நண்பர் ஜெயம் ரவிக்காக களமிறங்கிய சிம்பு தனது அப்பாவிடம் இது குறித்து பேசி சமாதானப்படுத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி இன்றைக்கு தனது வழக்கறிஞர் மூலமாக 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸே அனுப்பியிருக்கிறார் டி.ராஜேந்தர்.
டி.ராஜேந்தரின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் அனுப்பியிருக்கும் நோட்டீஸில், “தமிழ்ச் சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகர் எனது கட்சிக்கார்ரான இயக்குநர் டி.ராஜேந்தர். தனக்கென்று வித்தியாசமான பாணியில் வசனங்களை உச்சரித்து நடிப்பிலும் தனி ஸ்டைலை உருவாக்கி இருப்பவர்.
மாநில அரசு, மத்திய அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்றிருப்பவர். இவர் ஆற்றி வந்திருக்கும் அரிய கலைச்சேவைக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து எண்ணற்ற விருதுகளை வாங்கியிருக்கிறார்.
இப்போது சென்னையைச் சேர்ந்த ந்ந்தகோபால் என்பவர் தயாரித்திருக்கும் ரோமியோ ஜூலியட் இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் லோகேஷ் என்பவர் எழுதியிருக்கும் டண்டணக்கா என்றொரு பாடல் இடம் பெற்றுள்ளது. இதனை இன்னொரு இசையமைப்பாளரான அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலில் என் கட்சிக்கார்ர் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து இமிடேட் செய்து பாடியிக்கிறார். மேலும் பாடலின் பின்னணியில் என் கட்சிக்கார்ரான டி.ராஜேந்தர் பேசும் வசனமும் அவரது குரலிலேயே ஒலிக்கிறது.
இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். என் கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும், அவர் பேசும் வசனத்தை பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.
இது பல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி நடை, ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், காப்பிரைட் உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறாகள்.
இதே பாடலும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் யூ டியூப் தளத்திலும் சன் மியூஸிக் சாட்டிலைட் சேனலிலும் ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. படம் திரையிடப்படுவதற்கு முன்பாக இந்தப் பாடலை இப்படி வெளியிட்டதன் மூலம் என் கட்சிக்காரரின் பெருமையை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்துடனேயே செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தச் செயலுக்காக சட்டத்திற்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் அனுமதியில்லாமல் என் கட்சிக்காரரின் பெயரையும், இமேஜையும், அவரது தனிப் பாணியிலான உச்சரிப்பு வசனத்தையும் பயன்பத்தியிருப்பதற்காக இந்தப் பாடலை எழுதிய லோகேஷ், பாடலுக்கு இசையமைத்த டி.இமான், பாடலை பாடியிருக்கும் இசையமைப்பாளர் அனிருத், படத்தின் தயாரிப்பாளர் ந்ந்தகோபால் ஆகிய நான்கு பேரும் என் கட்சிக்காரருக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மேலும் யூ டியூப், சன் மியூஸிக் சாட்டிலைட் சேனல் உட்பட எந்தவொரு ஊடகத்திலும், எந்த் ஒரு இணையத் தளத்திலும் இந்தப் பாடலை வெளியிடுவதை உடனேயே நிறுத்த வேண்டும். கூடுதலாக வழக்கு செலவினங்களுக்காக ஆயிரம் ரூபாயை தர வேண்டும்…” என்றும் கேட்டுள்ளாராம்.
சர்ச்சையாகியுள்ள பாடல் இதுதான் :