நடிகர் விஜய்யிடம் இருந்து இயக்குதல் பணிக்காக அழைப்பு வந்துவிடாதா என்ற ஏக்கத்தில் பல இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் அந்த லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறார்.
தற்போது அவர் இயக்கி வெளியிட்ட ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயன் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கடுத்து விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை பா.விஜய் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவும் பா.ரஞ்சித் மிக ஆர்வமாக இருக்கிறாராம்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் செய்யும் எண்ணமும் இருக்கிறது. சூப்பர் ஹீரோ என்றால் ஹாலிவுட் படம் போல கற்பனையான விஷயங்களை சொல்லப் போவதில்லை. கற்பனைக்கும், நிஜத்துக்கும் உள்ள தொடர்பினை வைத்து அவருக்காகவே ஒரு கதை பண்ணியிருக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.
பா.ரஞ்சித் தனது விருப்பத்தைச் சொல்லிவிட்டார். இனிமேல் அழைக்க வேண்டியது விஜய்தான். அழைப்பாரா..?