இனிமேல் திரைப்படங்களை எதிர்த்து வழக்கு தொடுப்பவர்கள் செக்யூரிட்டி தொகையைக் கட்ட வேண்டும் என்கிற விதிமுறையைக் கொண்டு வருமாறு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ள ‘மாங்கா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசும்போது கேயார் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக கேயார் பேசும்போது, “இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்குள் அந்தத் தயாரிப்பாளர் படும் கஷ்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடைசி நேரத்தில் யாரோ சிலர் வேண்டுமென்றே ஒரு வழக்கினைத் தொடுக்கிறார்கள். டைட்டில் பிரச்சினையைக் கிளப்பி கோர்ட்டுக்கு செல்கிறார்கள். பணம் பைனான்ஸ் பிரச்சினை என்று சொல்லி ஸ்டே ஆர்டர் கேட்கிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி இனிமேல் ஒரு திரைப்படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்பவர்களிடமிருந்து செக்யூரிட்டி தொகையைக் கட்டச் சொல்ல வேண்டும். அப்போதுதான் வெறும் ப்ப்ளிசிட்ட்டிக்காக தடை கேட்டு கோர்ட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையும். திரைப்படங்களும் சரியான சமயத்திற்கு ரிலீஸாகும்.. இதனை சீக்கிரமாக அனைத்து அமைப்புகளும் சேர்ந்து தலைமை நீதிபதியிடம் சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும்..” என்றார்.
இப்படியெல்லாம் செக்யூரிட்டி கேட்பது மானநஷ்ட வழக்கு, மற்றும் நஷ்டஈடு கேட்கும் வழக்கில் மட்டுமே செல்லுபடியாகும். மற்ற வழக்குகளில் செக்யூரிட்டி பணம் கேட்பதற்கு சட்டத்திலேயே இடமில்லை.
பொதுநலன் பிரச்சினைகளுக்காக இப்போதெல்லாம் நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிப்பது பலருக்கும் அல்வா சாப்பிடுவதுபோலாகிவிட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி ‘கொம்பன்’ படத்தை எதிர்த்து வழக்கு போட்டது அரசியலுக்காக.. அவரது கட்சியின் வளர்ச்சிக்காக செய்த ஒரு சில்லுண்டி வேலை என்பது அரசியல் வட்டாரத்துக்கே தெரியும்.
ஆனால் இதனை அரசியல் ரீதியாகவே பகிரங்கப்படுத்த திரையுலகத்தினர் பயப்படுகிறார்களே.. பின்பு எப்படி இந்தச் சிக்கல்களிலிருந்து தப்பிப்பது..? முதலில் திரையுலகத்தினர் அனைவரையும் மக்கள் முன் பயப்படாமல் உண்மையை உள்ளது உள்ளபடி வெளிப்படையாக பேசச் சொல்லுங்கள்.. திரையுலகத்தினரின் கள்ள மெளனம்தான் அரசியல்வாதிகளின் பலம் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இது போன்ற பிரச்சினைகள் நிச்சயம் குறையும்.