நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெறற ‘சேதுபதி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு மிகப் பெரிய துன்பமே அவரை வேறொருவருடன் ஒப்பீட்டுப் பார்த்து பேசுவதுதான்…” என்று வருத்தப்பட்டார்.
இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் அருண்குமாரின் வெற்றியில் எனது வெற்றியும் அடங்கியிருக்கிறது. இதேபோலத்தான் விஜய் சேதுபதியும்.
அவருக்கு மிகப் பெரிய துன்பம் இருக்கிறது. இந்த சினிமால எல்லாரையும் ஒப்பீட்டு பார்த்தே சாகடிப்பாங்க.. ‘அவன் படம் ஓடுச்சு. உன் படம் ஓடலையே..?’ ‘அவன் கார் வாங்கிட்டான். நீ வாங்கலையே..?’ ‘அவன் வீடு வாங்கிட்டான். நீ வாங்கலையே..?’ ‘அவன் கல்யாணம் பண்ணிட்டான்.. நீ பண்ணலையே..?’ ‘அவன் புள்ள பெத்துட்டான்.. நீ பெக்கலையே..?’ இப்படியே சொல்லிட்டுப் போய் ‘அவன் செத்துட்டான்.. நீ இன்னும் சாகலையே’ன்றதை தவிர மத்த விஷயத்தையெல்லாம் பேசியே கொன்றுவாங்க..!
இந்த ஒப்பீட்டை விஜய் சேதுபதி தன்னுடைய முதல் படத்தில் இருந்து தொடர்ந்து அனுபவித்துக் கொண்டேயிருக்கிறார். இது பத்தி அவர் ஒரு சமயம் பேசும்போது, ‘விடுங்க ஸார்.. இதெல்லாம் சகஜம்தான.. இதைத் தாண்டித்தான நாம போகணும்’ என்றார்.
இப்போதெல்லாம் இயக்குநர்களை திரும்ப அழைக்கும் நடிகர்களே தமிழ்ச் சினிமாவில் கிடையாது. முந்தைய தலைமுறையில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என்று அனைத்து பெரிய நடிகர்களுமே தங்களை வைத்து ஹிட்டுக்களை கொடுத்த இயக்குநர்களை திரும்ப அழைத்து படம் கொடுத்தார்கள். பி.வாசு, மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் போன்றோரெல்லாம் திரும்பத் திரும்ப படம் செய்து கொண்டேயிருந்தார்கள். ஆனால் இந்த்த் தலைமுறை நடிகர்கள் அப்படியில்லை.
இந்தப் படம் ஏன் ஜெயிக்கணும்னு நினைக்கிறேன்னா… விஜய்சேதுபதி தன்னை வைத்து இயக்கிய இயக்குநர்களுக்கு திரும்பவும் வாய்ப்புக் கொடுக்கணும்னு நினைக்கிறார். அவங்களை பக்கத்துலேயே வைச்சுக்கணும்னு விரும்புறார். அதுனாலதான் இந்தப் படம் ஜெயிக்கணும்னு நான் விரும்புகிறேன்.
மோகன்லால் பிரியதர்ஷன் போல.. சத்யராஜ் மணிவண்ணன்போல.. கவுண்டமணி ஆர்.சுந்தர்ராஜன் போல.. இந்த விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணியும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.