அடிமட்ட கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற விஷயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘கனவு வாரியம்’.
இந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளது. இது மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் படம் இது என்பது மற்றுமொரு பெருமையாகும்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான சிவன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், இந்திய ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பாளர் உதய்குமார், நல்லகீரை ஜெகநாதன் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் (Weather Man) ப்ரதீப் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநரான அருண் சிதம்பரம் பேசுகையில், “இந்தப் படமானது புதிய சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்குபவர்களை தேடி கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களை கொண்டாட வேண்டும் என்பதைத்தான் சொல்கிறது. இந்தப் படத்தை பிரபல ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிடுவது இப்படத்திற்குக் கிடைத்த மேலும் ஒரு சிறப்பம்சமாகும்..” என்றார்.
விழாவில் கலந்து கொண்ட பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில், “இப்போதுள்ள இளைஞர்கள் கணிணியில் வேலை பெரு நிறுவன(corporate) வாழ்க்கை என்று இல்லாமல் மீண்டும் ஆரம்ப கால இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது பெருமையாக இருக்கிறது. என்னுடைய மகனும் இப்பொழுது இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது எனக்கு பெருமை அளிக்கிறது…” என்றார்.
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான சிவன் பேசும்போது, “இது எனக்கு ஒரு வித்தியாசமான நிகழ்வு. இதுவரையிலும் நான் கலந்து கொள்ளாத ஒரு நிகழ்ச்சி.. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது என்னுடய சிறு வயது கிராமத்து வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது.
இந்தப் படம் gross root innovation என்று சொல்லக் கூடிய அடிமட்ட கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருப்பது இன்னுமொரு பெருமை. மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இந்த மேடையை பங்கு கொண்டதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது..” என்று கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில் இயக்குநரின் தந்தை ஆணழகன் சிதம்பரம் பற்றியும் சிவந்தி ஆதித்தனார், எம்.ஜி.ஆர். இருவரும் அவருடன் எப்படி நட்புடன் இருந்தனர் என்பதை பற்றியும் எடுத்துக் கூறினார்.
அவர் மேலும் பேசும்போது, “இப்போதுள்ள தமிழ் சினிமாவில் எடுக்கும் மாஃபியா படங்களுக்கு நடுவில் இப்படம் மண்வாசணையைக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமின்றி நம்முடைய பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு செய்திருப்பது சிறப்பு.
என்னுடைய ஆரம்ப காலங்களில் ஒரு செட்டிற்குள் படமாக்கப்படும் சினிமாக்களை கண்டு மிகுந்த கோபம் அடைவேன். அந்தக் கோபத்தின் விளைவாகத்தான் என் படங்களில் கேமிராவை செட்டில் இருந்து வெளியே கிராமத்திற்கு எடுத்து சென்றேன். அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது..” என்றார்.
பாரதிராஜா கூறியதுபோல் மாறிவரும் தமிழ் சினிமாவில் மண் வாசனையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் இந்த படைப்பை வெற்றி பெற செய்ய வைக்குமாறு படக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.