‘குற்றப் பரம்பரை’ திரைப்படம் இப்போது தமிழ்த் திரையுலகின் இரண்டு பெரிய இயக்குநர்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.
தென் தமிழகத்தில் வாழ்ந்த முக்குலத்தோர் எனப்படும் தேவர் இனத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையினர் என முத்திரையிட்டு அவர்களுக்கு மட்டும் ரேகை பதிவுச் சட்டத்தைக் கொண்டு வந்து கொடுமைப்படுத்தினர். அந்த வரலாற்றை திரைப்படமாக ஆக்குவதுதான் எனது லட்சியம் என்று இயக்குநர் பாரதிராஜா 25 ஆண்டுகளாகவே சொல்லி வருகிறார். இதற்கு கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார்.
இந்த நேரத்தில் நடிகரும், நாவலாசிரியருமான வேல.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பாலா ஒரு திரைப்படத்தை எடுக்க முனைந்தார். இந்தப் பிரச்சனையில் பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையில் மோதல் எழுந்த்து.
2 வாரங்களுக்கு முந்தைய ‘குமுதம்’ பத்திரிகையில் இது குறித்து அளித்த பேட்டியில் எழுத்தாளர் வேல.ராம்மூர்த்தி ‘பாரதிராஜா ஒரு வேலையத்தவர்.. அவருக்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும்..?’ என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் பாரதிராஜாவும் ‘எனது எச்சிலை தொட்டுப் பார்க்க பாலா விரும்ப மாட்டான் என்றே நினைக்கிறேன்’ என்று சுற்றிவளைத்து பாலாவைத் தாக்கிப் பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தக் ‘குற்றப் பரம்பரை’ வரலாற்று கதையை படமாக்க அந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியை 3 நாட்களுக்கு முன்பாக உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் பூஜை போட்டார். அந்த நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய பாரதிராஜா பாலாவைக் குறிப்பிட்டு ‘நான் தரையில் கிடப்பதைப் பற்றிப் பேச மாட்டேன்’ என்று குதர்க்கமாக குறிப்பிட்டுச் சொன்னார்.
இதற்குப் பின்பு நேற்று வெளிவந்த ‘குமுதம்’ பத்திரிகையில் பேராசிரியரும், இயக்குநருமான ரத்னகுமார் அளித்த பேட்டியில் வேல.ராம்மூர்த்தியையும், இயக்குநர் பாலாவையும் ‘கதைத் திருடர்கள்’ என்றும், பாலாவை ‘நாய்’ என்றும் குறிப்பிட்டு மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருந்தார்.
இதைப் படித்தவுடன் மிகவும் கோபமடைந்த இயக்குநர் பாலா உடனடியாக அவசரமாக நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பொருமித் தள்ளிவிட்டார்.
“பாரதிராஜா இயக்கவிருக்கும் ‘குற்றப் பரம்பரை’ படத்தின் கதையும், நான் இயக்கப் போகும் புதிய படத்தின் கதையும் வேறு, வேறு. பாரதிராஜா ஒரு வரலாற்றை படமாக எடுக்க இருக்கிறார். ஆனால் நான் வேல.இராமமூர்த்தி எழுதிய ‘கூட்டாஞ்சோறு’ கதையில் இருந்து சில சம்பவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் என்னுடைய கற்பனையையும் கொஞ்சம் கலந்து உருவாக்கியிருக்கும் புதிய கதையைத்தான் படமாக்க இருக்கிறேன்.
நான் எடுக்க இருப்பது கதை. ஆனால் பாரதிராஜா எடுக்க இருப்பது வரலாறு. இதனை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பாரதிராஜா இயக்கும் படத்தின் பெயர்தான் ‘குற்றப் பரம்பரை’. என்னுடைய படத்தின் பெயர் வேறு. அதை பின்னர் அறிவிப்பேன்.
‘குற்றப் பரம்பரை’ என்பது நடந்த வரலாறு. இதை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். தான் மட்டும்தான் படமாக்குவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படிச் சொல்ல இங்கே யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மையில் பெருங்காமநல்லூரில் நடந்த வரலாற்றுச் சம்பவம் என்னவென்றே எனக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது என்னால் எப்படி அந்த வரலாற்றை படமாக எடுக்க முடியும்..?
ஒரு நாள் திடீரென்று அவர் எனக்கு போன் செய்து ‘இது என் கனவுப் படம், நீ எடுக்கக் கூடாது’ என்றார் பாரதிராஜா. நானும், ‘நான் உங்கள் கதையை எடுக்கவில்லை’ என்றேன். பாரதிராஜாவிடம் பல முறை சொல்லியும், அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை.
அதன் பின்னர், “பாலா என் எச்சிலை தின்ன மாட்டான் என நம்புகிறேன்” என்று பாரதிராஜா பேட்டி கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப எரிச்சல்தான் வந்தது. அதுதான் நாம் தன்னிலை விளக்கம்தான் சொல்லிட்டோமே.. அந்தக் கதையில்லைன்னு சொல்லியாச்சே.. திரும்பத் திரும்ப ஏன் அதையே அவர் சொல்லிட்டிருக்காருன்னு கோபம் வந்தது.. சரி.. அவருக்கும் வயதாகிவிட்டது, குழந்தை மாதிரி நினைத்துக் கொள்வோம் என விட்டுவிட்டேன்.
இந்த நேரத்தில் திடீரென்று உசிலம்பட்டியில் பாரதிராஜா பூஜை போடப் போகிறார் என்று தெரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் என்னை சந்திக்க வந்த தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் இது குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு என்னையும் அந்த பூஜைக்கு கூப்பிடச் சொல்லுங்க. நானும் அந்த விழாவுக்கு வந்து உண்மையை பேசிடறேன்னு சொன்னேன். ஆனால் என்னை அந்த விழாவுக்கு அழைக்கவில்லை. நானும் போகவில்லை.
2 நாட்களுக்கு முன்பாக அந்த பூஜை நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசியதாக ஒரு செய்தி பத்திரிகையில் வந்திருந்த்து. அதையும் தனஞ்செயனிடம் சுட்டிக் காட்டி என்ன இப்படி என்று கேட்டேன். அவரும் பாரதிராஜாவிடம் பேசிவிட்டு இதோட விட்டுரலாம்னு சொல்லியிருக்கேன். நீங்களும் விட்ருங்களேன் என்றார். அதுனால நானும் பேசாமல் இருந்தேன்.
ஆனால் இன்றைக்கு குமுதம் பத்திரிகையில் இந்த படத்துக்கு கதை எழுதுகிற ரத்னகுமார் என்னைக் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறான். இனிமேலும் நான் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்றுதான் நல்லாருக்காது என்று நினைத்து எனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்குத்தான் இந்த பிரஸ் மீட்டை ஏற்பாடு செஞ்சிருக்கேன்.
பாரதிராஜா திரும்ப திரும்ப ரத்னகுமாரை எனக்கு எதிராக பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார். எனக்கு படம் எடுக்க தெரியாது என்றும், பாரதிராஜாவிடம் உதவியாளராக வந்து சினிமாவைக் கற்றுக் கொள்ளட்டும் என்றும் ரத்னகுமார் கூறியுள்ளான். நான் இதுவரையிலும் பாலு மகேந்திரா ஒருவரிடம் மட்டுமே உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். அவரை தவிர வேறு யாரையும் நான் குருவாக ஏற்றுக் கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருப்பவன். அதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்தவன்.
இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விசயத்தை இப்போது சொல்கிறேன். நான் ‘பிதாமகன்’ ஷூட்டிங்ல இருந்தப்ப இந்த ரத்னகுமார் என்னை பார்க்க வந்தான். ஷூட்டிங் முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்தால்.. இவனும் என்கூட வந்து ஒரு முக்கால் மணி நேரம் பேசியே கொல்லுவான்.. அதுலேயும் பாரதிராஜாவின் பரம்பரையையே தப்புத் தப்பாகப் பேசி, ‘அவன் படம் எடுக்க மாட்டான். என்னுடைய கதையை வைத்து நீ படம் எடு’ என்று அப்போது கூறிய கீழ்த்தரமானவன்தான் இந்த ரத்னகுமார். இன்று அவனை என்னைப் பற்றி தவறாக பேசவிட்டு, பாரதிராஜா வேடிக்கை பார்க்கிறார்.
கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன்.. பாரதிராஜா, ரத்னகுமார் இருவரும் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை நான்கு முறை என்னைப் பற்றி அவர்கள் பேசும்போது பொறுமையாக இருந்துவிட்டேன். இனிமேல் அப்படியே பொறுமையாக இருக்க முடியாது. இதற்கு மேலும் அவர்கள் ஒரு வார்த்தை இது சம்பந்தமாக என்னைப் பற்றி பேசினால், எனக்கு நல்லதோ, கெட்டதோ.. ஆனால் அவர்களுக்கு அது நல்லதல்ல. இது என் இறுதி எச்சரிக்கை..” என்றார் கொதிப்பு அடங்காமல்..!
இயக்குநர் பாலாவின் முழுப் பேச்சு இங்கே :