TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், லிங்கா, சாரா ஆச்சர் நடிப்பில், அடிதடி வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம் “தாவுத்”.
இந்தப் படத்தில் ‘பரோல்’, ‘உடன்பால்’, ‘பெண்குயின்’, ‘சேதுபதி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். சாரா ஆச்சர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
‘வத்திகுச்சி’, ‘காலா’ போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார். பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு – S. உமா மகேஸ்வரி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன்.
இம்மாதம் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் ராதாரவி பேசும்போது, “சமீபமாக எனக்கு உடல் நிலை சரியில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். சினிமாக்காரன் எப்போதும் தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டு தூங்க வேண்டும், இல்லையெனில் வேறு ஆளை போட்டு விடுவார்கள்.
இந்தப் படத்தில் இரண்டு நாள்கள்தான் வேலை பார்த்தேன். தம்பிதுரைதான் தயாரிப்பாளர் ஆனால் அவர் பெயர் வரவில்லையே எனப் பார்த்தேன். ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்திற்கு அந்தப் பெயர் வைத்துவிட்டார். வாழ்த்துக்கள்.
படத்தில் பேய் இருக்கிறதா? இரத்தம் இருக்கிறதா? எனக் கேட்டேன். ஆனால் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்றைய காலத்தில் இதெல்லாம் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. ரஜினியே அத்தனை வெட்டு குத்து, இரத்தம் தெறிக்க நடிக்கிறார். அவரே இரத்தத்தை நம்பும்போது நம்மைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
படத்தில் நாம் கொஞ்சம் சுயநலமாகத்தான் இருக்க வேண்டும். கதாப்பாத்திரத்திற்கு தயாரிப்பாளர் தன் பெயர் வைத்தது போல இருக்க வேண்டும். படம் மிக அருமையாக வந்துள்ளது. எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தமிழ் வாழ வேண்டும் என்றால் அனைவரும் தமிழ்ப் படங்கள் பார்க்க வேண்டும். எல்லோரும் திரையரங்கில் இப்படத்தைப் பாருங்கள் நன்றி..” என்றார்.
இசையமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதி பேசும்போது, “எங்களை வாழ்த்த வந்துள்ள ஆளுமைகளுக்கு நன்றி. தயாரிப்பாளர் தம்பிதுரை சார், நாங்கள் ஆணாதிக்கம் எனக் குறும்படம் எடுத்தபோது, அதில் நடித்தார். அவர் இந்தப் படத்தை இந்த மேடைக்கு எடுத்து வர எவ்வளவு கஷ்டப்பட்டார் எனப் பார்த்துள்ளேன். பல தடைகளைக் கடந்து இப்படம் வந்துள்ளது.
தாவுத் இப்ராஹிம் பற்றி உங்களுக்குத் தெரியும் அதற்கும் இந்த கதைக்கும் கண்டிப்பாகச் சம்பந்தம் இல்லை. இந்த தாவுத் படத்தை ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. மிகப் பெரிய பயணம். அருண்பாரதி அண்ணன் 100-வது பாடலை இசையமைத்துள்ளேன் என்பது மகிழ்ச்சி. படத்தில் எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்…” என்றார்.
நாயகி சாரா ஆச்சர் பேசும்போது, “பிரசாந்த் சார் கால் செய்து ஒரு கதை வைத்திருக்கிறேன் என ஆபிஸ் வரச் சொன்னார். அவர் சொன்ன கதை எனக்குத்தானா என ஆச்சரியமாக இருந்தது. மிகச் சவாலான கேரக்டர். படத்தில் கொஞ்சமே வந்தாலும், நல்ல கேரக்டர். என்னை நம்பி தந்ததற்கு இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு நன்றி. இசை சூப்பராக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி..” என்றார்.
நாயகன் லிங்கா பேசும்போது, “சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது படம்தான் நான் நடித்த முதல் படம், அது வெளியாகி 10 வருடம் ஆகிறது. இப்போது ஹீரோவாக முதல் படம். அஜய் பிரதர் இப்படம் மூலம்தான் பழக்கம். அவர் நான்தான் லீடாக நடிக்கிறேன் என்றார். சாரா நான்தான் லீட் என்றார், கிட்டதட்ட படத்தில் நடிக்கும் அனைவருமே லீட்தான் என்றார்கள். இயக்குநர் எல்லோரிடமும் நீங்கள்தான் நாயகன் என சொல்லியிருக்கிறார். அதன் பிறகு நான் லீட் என சொல்வதையே நிறுத்திவிட்டேன்.
ஆனால் படம் பார்த்த பிறகுதான் புரிந்தது. படத்தில் எல்லோருக்குமே லீட் மாதிரியான கேரக்டர்தான். ஏதோ கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நான் லீட் எனச் சொல்கிறேன். நாயகிகூட எனக்குத்தான் காட்சிகள் அதிகம். அவர்தான் மாப்பிள்ளை.. ஆனால் அவர் போட்டுருக்க சட்டை என்னுடையதில்லை என்பது போல, அவர் எனக்கு ஜோடி இல்லை. பரவாயில்லை.
தம்பிதுரை சாரை படம் ஆரம்பிக்கும்போதுதான் பார்த்தேன். சம்பளம் எல்லாம் பேசினார், அதன் பிறகு ஒரு நாள்கூட ஷூட்டிங்கிற்கு வந்ததே இல்லை. இயக்குநர் பிரசாந்த் மீது முழு நம்பிக்கை வைத்தார். அவர் இந்தப் பணத்தை அவர் நலனுக்குச் செலவழித்திருக்கலாம். ஆனால் இந்தப்படம் எங்களை நம்பி எடுத்துள்ளார். உங்களால் பல குடும்பங்கள் சாப்பிட்டுள்ளது. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் திரையரங்கில் வந்து பாருங்கள்..” என்றார்.
இயக்குநர் பிரசாந்த் ராமன் பேசும்போது, “சின்ன படங்கள் ஜெயித்தால்தான் இன்ட்ஸ்ட்ரி நல்லா இருக்குமெனச் சொல்வார்கள். அதை மனதில் வைத்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார் இந்தப் படத்திற்குக் கடைசி நிமிடத்தில் உதவி செய்தார். அதேபோல் இந்தப் படத்திற்கு உதவி செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி.
நான் பீட்சா டெலிவரி பாயாக இருந்து இயக்குநர் ஆகியுள்ளேன். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் தம்பி துரை சார். அவர் வெத்தலையில் இருந்து பித்தலை எடுப்பவர். நல்ல பெயர் அவர் எடுத்துக் கொள்வார். ஏதாவது பிரச்சனை என்றால் என்னை மாட்டிவிடுவார். ரதாரவி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன். உடனே பேசி வரச் சொல்கிறார் என அவரிடம் அனுப்பிவிட்டார். நான் பயந்து கொண்டே போனேன். ஆனால் அவர் என்னை அவ்வளவு மரியாதையாக நடத்தினார். சார் சம்பளம் என கேட்டேன். நான் வந்தால் நீ நல்லா இருப்பேல்ல.. போ பார்த்துக் கொள்ளலாம் என்றார். அவர் மாதிரி ஆட்கள் இருப்பதால்தான் சின்ன பட்ஜெட் படங்கள் உயிர் வாழ்கிறது.
தயாரிப்பாளர் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பார். ஆனால் சாப்பாட்டில் என்றுமே கணக்கு பார்த்ததில்லை. எல்லாமே என்னை நம்பி தந்துவிட்டார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். லிங்கா முதல் நாள் ஷூட்டில் 7 விதமாக நடித்துக் காட்டினார். எனக்கு என்ன தேவை என்பதைக் காட்டத்தான் அவ்வாறு நடித்தார். இந்த கதாப்பாத்திரத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளார்.
சாரா சிறப்பாக நடித்துள்ளார். சரத் ரவியை வில்லனாக யாரும் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் படம் பார்க்கும்போது அனைவரும் பாராட்டுவார்கள். நாயகி சாரா உலக சினிமா பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். இசையமைப்பாளர் ராக்கேஷ் என் நண்பன், என் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளராக இருப்பார். மிக அட்டகாசமாக இசையமைத்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. இம்மாதம் 12ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்…” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “மிக மகிழ்ச்சியாக உள்ளது. சுஷாந்த் கேமராமேன் 6 மாதம் முன் அவருடன் வேலை பார்த்தேன். மிகுந்த திறமைசாலி. அவர்தான் ஆடியோ லாஞ்ச் கூப்பிட்டார். போஸ்டரை பார்த்தாலே படத்தைப் பற்றிப் புரிந்து விடும். போஸ்டர் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாமே தங்களுக்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்தால்தான் நடிப்பார்கள். இத்தனை நல்ல நடிகர்களை நடிக்க வைத்திருப்பதிலேயே படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. இயக்குநர் டார்க் ஹீயுமரில் அழகாகப் படத்தை இயக்கியுள்ளார். லிங்காவை பல வருடங்களாக பார்த்து வருகிறேன். ஒரு நடிகரிடம் இன்னொஸன்ஸ் இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும், ரஜினி சாரிடம் இருக்கும் இன்னொஸன்ஸ் லிங்காவிடம் இருக்கிறது. அவர் ஜெயிக்க வாழ்த்துகள். 100-வது பாடலை எழுதியுள்ள அருண் பாரதிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு தம்பிதுரைக்கு வாழ்த்துக்கள். கண்டண்ட் நன்றாக இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் படம் ஜெயிக்கும் வாழ்த்துக்கள். .” என்றார்.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Our Score











