வரும் செப்டம்பர் 1-ம் தேதி 6 புதிய தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அதில் ஒன்றாக வருகிறது ‘டீமன்’ என்ற திரைப்படம்.
இந்தப் படத்தை விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சோமசுந்தரம் தயாரித்துள்ளார்.
படத்தில் சச்சின், அபர்ணதி, ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கே.பி.ஒய்.’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்கு இசையமைத்த ரோனி ரபெல் இசையமைக்க, ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிகுமார்.எம் படத் தொகுப்பு செய்ய, விஜய் ராஜன் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
இயக்குநர் வசந்தபாலனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரமேஷ் பழனிவேல் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
பேய்க்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வேறொரு சொல்தான் டீமன். படத்தின் டிரைலரில் இது உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்றும் போட்டுள்ளார்கள்.
இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இப்படம் குறித்துப் பேசும்போது, “இயக்குநர் வசந்தபாலன் சாரிடம் ‘அங்காடித் தெரு ‘ படம் துவங்கி இப்போதுவரையிலும் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன்.
இந்த ‘டீமன் ‘ என்னுடைய முதல் திரைப்படம். டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஒன்றாக இணைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம்தான் இந்த ‘டீமன்’. மேலும், அது தொடர்பான பல்வேறு மர்ம நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம்தான் இது.
அவர்களது மரணம் தற்கொலை என்று வழக்கு முடிக்கப்பட்டாலும், அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை.
அவர்களின் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்று பேய், அமானுஷ்யத்தில் நம்பிக்கை இருந்ததால் அவர்கள் அப்படி செய்ததாகச் சொல்லப்பட்டது. அது உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதையை எழுதினேன்.
அதில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து எழுதியிருக்கிறேன். ஆக, இது வெறும் ஹாரராக இல்லாமல், ஒரு சைக்கலாஜிகல் ஹாரர் என்ற ஜானரில் இருக்கும்.
வழக்கமாக இது போன்ற படங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீடு இருக்கும். அதில் அமானுஷ்ய சக்தி வாழ்ந்து வந்து, அங்கே குடியேறுபவர்களை ஆட்டுவிக்கும். ஆனால், இந்தப் படத்தில் நகரின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களையும், அதனால் பாதிக்கபப்டும் நாயகனின் உளவியல் தொடர்பான பிரச்சனைகளையும் ஒன்றாகச் சொல்லியிருக்கிறோம்.
நிச்சயம், வித்தியாசமான படம் பார்த்த அனுபவத்தை இந்த டீமன் திரைப்படம் கொடுக்கும். இந்தப் படத்துக்கு பல தலைப்புகளை விவாதித்தோம், அப்போதுதான் திடீரென்று இந்தத் தலைப்பு தோன்றியது. கேட்கவும் நன்றாக இருந்ததால் இதை தலைப்பாக வைத்துவிட்டோம்.
ஹாரர் படங்கள் என்றாலே விஷுவலும், பின்னணி இசையும்தான் படத்திற்கு ஆணி வேர். அதை எந்த அளவிற்கு சிறப்பாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறோம்.
சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தில் இசைக் கலவை செய்த ரோனி ரபேல்தான் இந்தப் படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். நிச்சயம்… இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக்கலவை காரணமாகவே சிறந்தத் திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.
முதலில் நான் சந்தித்த மக்கள் மற்றும் நான் வளர்ந்த மண் சார்ந்த கதையைத்தான் முதல் படமாக எடுக்க நினைத்தேன், அதற்கான கதையைத்தான் எழுதி வைத்திருந்தேன். ஆனால், அப்படத்திற்கான பட்ஜெட் எனக்கு அமையவில்லை, அப்போதுதான் இப்படி ஒரு ஜானர் படம் எடுப்பதற்கான வாய்ப்பும், அதற்கான பட்ஜெட்டும் கிடைத்தது,
அது மட்டுமல்ல.. பேய் படம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது, அதுவும் ஒரு காரணம். அமானுஷ்ய படமாக இருந்தாலும், வசந்த பாலன் ஹாரர் படம் இயக்கினால் எப்படி இருக்குமோ.. அப்படிதான் இந்தப் படத்தை நான் இயக்கியிருக்கிறேன். ஒரு உணர்ச்சிகரமான பாணியிலான ஒரு பேய் படமாகத்தான் இந்த ‘டீமன்’ படம் இருக்கும்…” என்றார்.
இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் புரொடக்ஷன்ஸ், பி.யுவராஜ் பேசும்போது, “இந்த ’டீமன்’ படம் இதுவரை வெளியான திகில் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். அதற்குக் காரணம், பேயால் ஒரு மனிதன் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறான்.. பேய், மனிதனை உளவியல் ரீதியாக எப்படி ஆட்கொள்கிறது என்பதை இந்த படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அதேபோல், இன்றைய காலக்கட்டத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை, சில நாட்கள் கழித்து ஒடிடி-யில் பார்த்துக் கொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், திகில் படம் என்றால் அதை திரையரங்கில்தான் பார்க்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் இருக்கிறது.
காரணம், பெரிய திரையில், ஒலி உள்ளிட்ட தொழில் நுட்ப விஷயங்களுக்காக திகில் படங்களை திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விரும்புகிறார்கள். அதனால் திகில் படங்கள் மக்களை திரையரங்கிற்கு அழைத்து வருவதாலும், இது போன்ற படங்கள் அதிகமாக வெளியாகிறது…” என்றார்.











