Olympia Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘டாடா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது..!
Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார், பல தரமான திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். அவை தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ‘டாடா’ திரைப்படம்.
இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
K.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘ராசுக்குட்டி’ படம் வெளியானதிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தில் திரையில் ஒன்றாகத் தோன்றுகிறார்கள்.
மேலும் ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ் புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – கே.எழில் அரசு, இசை – ஜென் மார்ட்டின், படத் தொகுப்பு – கதிரேஷ் அழகேசன், கலை இயக்கம் – சண்முக ராஜ், ஆடை வடிவமைப்பு – சுகிர்தா பாலன், நிர்வாகத் தயாரிப்பு – A.P.V.மாறன், ஒலி வடிவமைப்பு – அருணாச்சலம் சிவலிங்கம். இப்படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K.பாபு இயக்குகிறார்.
ஒரு அழகான காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் பார்வையாளர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். நடிகர் கவினுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரது ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பான ‘டாடா’ இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் கணேஷ் K.பாபு கூறுகையில், “இந்தத் தலைப்பு மக்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது என்பதால் இப்படத்திற்கு வைத்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த வார்த்தையை குறிப்பிட்டிருப்பார்கள். அல்லது கேட்டிருப்பார்கள். தவிர, படத்தில் இந்த தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது. திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இந்தத் தலைப்பு இருக்கும்.
படத்தின் மொத்தக் குழுவினரும் படத்தை மிகச் சிறப்பாக வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது, முழு படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கின்றோம். முழுப் படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது…” என்றார்.









