தமிழ்ச் சினிமாவுலகத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கென்று ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்’ என்கிற பெயரில் பழமையான ஒரு அமைப்பு உள்ளது. தற்போது ‘தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் இன்னொரு சங்கமும் உருவாகியுள்ளது.
ஆனால், இந்த இரண்டாவது ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் இணைக்கப்படவில்லை.
சமீப நாட்களில் இந்த இரண்டு சங்கத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் பணியாற்றும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்று அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து வந்தனர்.
அதன் விளைவாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் 27-12-2021, அன்று தொழிலாளர் துறையின் இணை ஆணையர்-1 மற்றும் தொழிற் சங்கங்களின் கூடுதல் பதிவாளரிடம், “தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வேலை செய்யும் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதாக” புகார் மனுவை அளித்தனர்.
இதையடுத்து இரண்டு தரப்பினரையும் தொழிலாளர் நல இணை ஆணையர் நேரடி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2-ம் தேதியன்று இரண்டு சங்கத்தினரும் தொழிலாளர் துறை ஆணையர் முன்பு ஆஜராகியுள்ளனர்.
அப்போது இரு தரப்பினரிடமும் தொழிலாளர் இணை ஆணையர் விசாரணை நடத்தியுள்ளார். பின்பு, “ஒரு தொழிற்சங்கம் மற்றொரு தொழிற் சங்கத்தின் நோக்கத்திற்கும், அவரவரது உறுப்பினர்களின் பணி உரிமைகளுக்கும் பாதிப்பு இன்றி செயல்பட வேண்டும் என்று இரு தரப்பிற்கும் அறிவுறுத்தப்படுகிறது…” என்று சொல்லி கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் பெப்சியுடன் இணையாத சங்கங்களைச் சேர்ந்தவர்களும் திரைப்பட துறையில் பணியாற்றலாம் என்பது உறுதியாகியுள்ளது.