full screen background image

“தெலுங்கு ரசிகர்களுக்கு நிச்சயமாக ‘கோப்ரா’வை பிடிக்கும்” – நடிகர் விக்ரமின் நம்பிக்கை..!

“தெலுங்கு ரசிகர்களுக்கு நிச்சயமாக ‘கோப்ரா’வை பிடிக்கும்” – நடிகர் விக்ரமின் நம்பிக்கை..!

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, தயாரிப்பாளர் என்.வி.திருப்பதி பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் ‘சீயான்’ விக்ரம் பேசுகையில், ”கோப்ரா’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவால் இங்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டு இருக்கிறார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த கதையை விவரிக்கும்போத இந்தப் படத்தில் நடித்தாக வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.

இந்தக் ‘கோப்ரா’ திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கோப்ரா’ என்ற ராஜ நாகம் எப்போது தாக்கும் என்று தெரியாது. அதன் சுபாவம் அப்படி. ‘கோப்ரா’ ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தோலை உரித்து கொண்டு புது வடிவத்தை பெறும். அதேபோல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பயங்கர புத்திசாலி. படத்தின் இரண்டாம் பகுதியில்தான் என்னுடைய கதாபாத்திரத்தின் வீரியத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். உச்சகட்ட காட்சிவரையிலும் கதை சுவாரசியமாக பயணிக்கும்.

படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன். ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்.

இந்தக் ‘கோப்ரா’ திரைப்படத்தில் கணித ஆசிரியர் வேடத்தில் நடித்தாலும், நான் மாணவனாக இருந்தபோது கணித பாடத்தில் பலவீனமான மாணவனாகவே இருந்தேன். ஆசிரியர் பல முறை தலையில் குட்டி, ‘உனக்கு கணக்கு வராதுடா…’ என தெரிவித்தார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் கணித ஆசிரியர் வெட்க சுபாவம் உள்ளவராக இருந்தாலும், அசாத்தியமான திறமைசாலி. இவருக்கு ஹாலுஸிநேஸன் என்ற பாதிப்பும் இருக்கும்.

ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர்.. இதனை கடந்துதான் நடித்தேன். எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி.. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.

இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.

மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது.

மிருணாளினி ரவி என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின்போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின்போது அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்றபோது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. கோப்ரா திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும்போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம். நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட்… என அனைத்தும் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும்.

தற்போது இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான  திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் இந்தக் ‘கோப்ரா’ படத்திலும் இருக்கிறது.

கோப்ரா’ போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் ஸார்தான் பொருத்தமானவர் என ஆவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று ‘கோப்ரா’ படத்தை தெலுங்கில் வழங்குகிறார்.

எனக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தக் ‘கோப்ரா’ படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது…” என்றார்.

Our Score