தேர்தல் களத்தில் தங்களுக்குப் பிடித்த கட்சிகளில் சேர்ந்து அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கலைஞர்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் கட்சிகளின் மேல் பரிவு இருந்தா்லும் வெளியில் சொல்லாமல் அவ்வப்போது சவுண்டு மட்டும் கொடுக்கும் கலைஞர்கள் இன்னொரு பக்கம்..
இவர்கள் இரண்டு பேரும் இல்லாமல் நாட்டில் அப்போது நடக்கும் நிகழ்வுகளுக்காக மக்களிடையே தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் கலைஞர்களும் இருக்கிறார்கள். 2002-ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடந்தபோது கோடம்பாக்கத்தில் கைவிட்டு எண்ணககூடிய அளவுக்கான கலைஞர்கள்தான் அதனைப் பற்றி திருவாய் திறந்தார்கள். அதுவும் கொஞ்ச நாள்தான்.. மறுபடியும் தங்களது தொழிலை பார்க்க் கிளம்பிவிட்டார்கள்.
இப்போது அந்த மதக் கலவரம் ஒன்றையே மையமாக வைத்து பிரதமர் வேட்பாளராக பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஓரணியில் இணைந்திருக்கிறார்கள்.
நாட்டில் மதக் கலவரம் ஏற்பட காரணமாக இருக்கும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு வரும் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டாம் என்று பொதுமக்களிடம் இந்தக் கலைஞர்கள்-எழுத்தாளர்கள் கொண்ட கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த கோரிக்கை அறிக்கையில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சில இயக்குநர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், சீனு ராமசாமி, தாமிரா, பா.ரஞ்சித், ஆர்.பி.அமுதன், நவீன், ராஜூமுருகன், வ.கீரா, கதாசிரியர் பாஸ்கர் சக்தி, நடிகை ரோகிணி, பாடலாசிரியர் ஏகாதேசி ஆகியோர்தான் மக்களுக்கான இந்தக் கோரிக்கையில் கையெழுத்திட்டிருக்கும் திரையுலக பிரபலங்கள்..!
அறிக்கையின் முழு விபரத்தை இங்கே காணவும்..!
இந்த அளவுக்காகவாவது தங்களது கருத்துக்களை வெளியில் சொன்னார்களே.. அதுவரையில் சந்தோஷம்தான்..!