Trident Arts R.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘செம்பி’.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில் இன்று காலை பத்மபூஷன், உலக நாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை கோவை சரளா பேசும்போது, “இந்தப் படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார்தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும். பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள்…” என்றார்.
தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசும்போது, “இந்த இசை விழாவின் நாயகன் நிவாஸ் K.பிரசன்னாவிற்கு வாழ்த்துகள். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். அவரது ‘கும்கி’ படம் பார்த்து அவருடன் வேலை செய்ய வேண்டுமென கேட்டு படம் செய்தோம். இந்தப் படத்தை மிக அற்புதமாக எடுத்திருக்கிறார். கோவை சரளா மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசும்போது, “கமல் சார் ஒரு படத்திற்கு வந்தால் அது வெற்றிக்கான அறிகுறி. ‘விக்ரம்’ படம் மூலமாக திரைத்துறையையே மீண்டும் ஜொலிக்க வைத்துள்ளார். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். கோவை சரளா மிகச் சிறந்த நடிகை. மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை பிடிக்கும் தகுதி கோவை சரளாவுக்கே உண்டு. பிரபு சாலமன் செய்த அற்புதங்களில் ஒன்று, தம்பி ராமையா போன்ற நடிகரை தமிழுக்கு கொடுத்தது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, “கமல் சார் இன்னும் எல்லோரையும் இன்ஸ்ஃபையர் பண்ணிக் கொண்டிருக்கிறார். கமல் சார் போன்ற ஆளுமை கிடைத்தது சினிமாவுக்கு பெருமை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் ‘மைனா’, ‘கும்கி’ என எடுத்து பிரமிக்க வைக்கிறார் பிரபு சாலமன். வெறும் பறவை பறக்கும் இயற்கையைதான் காட்டுகிறார்.. தியேட்டர் அதிர்கிறது. அதே போல் கோவை சரளா பிரமிக்க வைக்கும் நடிப்பை இந்தப் படத்தில் தந்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “கமல் சாருக்கு என்னைவிட தீவிரமான ரசிகன் இருக்க முடியாது. அவரை வைத்து ‘சிங்காரவேலன்’ படமெடுத்தேன். இன்றும் கொண்டாடும் படமாக அது இருக்கிறது. அதற்கு காரணம் கமல் சார்தான். அவர் ஒவ்வொரு காட்சியிலும் சின்ன சின்ன நகாசு வேலைகள் செய்து அசத்திவிடுவார். அஷ்வின் அவர்களே, கமல் சாரை பார்த்து நடிக்க கற்றுக் கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குநர்களே இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் பிரபு சாலமன். மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கூடியவர் கோவை சரளாதான். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.
கே.பாக்யராஜ் பேசும்போது, “கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு. அவர் நடித்த ‘16 வயதினிலே’ படம்தான் எனக்கும் ஆரம்பம். அந்தப் படத்திலேயே அவரது திறமையை பிரமித்து பார்த்திருக்கிறேன்.
அதே போல் கோவை சரளாவை அவருடைய எட்டு வயதிலிருந்தே எனக்கு தெரியும். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நான் இந்தப் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று என்னிடம் அடம் பிடித்து நடித்தார். அவரை ‘இன்னொரு மனோரமா’ என்றார்கள். அது உண்மைதான். இந்தப் படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார் கோவை சரளா. பிரபு சாலமன் மிகச் சிறந்த இயக்குநர். ‘கும்கி’ படத்தில் அவரை பார்த்து பிரமித்தேன். இந்தப் படத்தின் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “Trident Arts R.ரவீந்திரன் தயாரிப்பில் முந்தைய படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அது போல் இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும். உங்களுக்கு கமல் சார் சப்போர்ட் இருக்கிறது. அவரால் நானே ‘தெனாலி’ படத்தில் தயாரிப்பாளராக மாறினேன். கோவை சரளாவை நாயகியாக்கினார். அது போல் அவர் சப்போர்ட் இருக்கும்போது எளிதாக ஜெயிக்கலாம். இந்தப் படமும் ஜெயிக்கும் வாழ்த்துகள்…” என்றார்.
நடிகர் அஷ்வின் பேசும்போது, “இந்தப் படம் பண்ணியதே எனக்கு பாக்கியம். ரவி சார் எனக்கு முதல் படம் கொடுத்ததோடு, இரண்டாவது படமும் கொடுத்தார். பிரபு சாலமன் சார் படம் என்றவுடனே நான் எதுவுமே கேட்கவில்லை. நான் ஓகேவா சார் எனக் கேட்டேன், அவர் எனக்கு செய்ததை திரையில் நீங்கள் பார்ப்பீர்கள். கமல் சார் பக்கத்தில் நிற்பதே பெருமை. அவர் வந்து வாழ்த்தியது மிகப் பெரிய பெருமை…” என்றார்.
இயக்குநர் பிரபு சாலமன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னுடன் தோள் கொடுத்து உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பெரும் நன்றி. உங்களால்தான் இந்தப் படம் சாத்தியமானது. இந்தப் படத்தின் பாத்திரத்திற்காக பல காலம் அலைந்திருக்கிறேன்.
கொடைக்கானலில் இருந்து கொல்லிமலைவரை பலரை தேடினோம். இறுதியில் கமல் சாரின் ‘சதி லீலாவதி’ படம் ஞாபகத்திற்கு வந்தது, உடனேயே கோவை சரளா மேடத்தை பார்த்து கதை சொன்னேன். “என்னால் முடியுமா..?” என்று கேட்டார். “உங்களால் கண்டிப்பாக முடியும்” என்றேன். சொன்னது போலவே படத்தில் அசத்திவிட்டார் சரளா மேடம்.
இந்தப் படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு இசையால் உயிர் கொடுத்த இசையமைப்பாளர் நிவாஸுக்கு நன்றி. ரசிகனின் ரசனையை உயர்த்துகிற கமல் சார் இங்கு வாழ்த்தியது எனக்கு பெருமை. எல்லோருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “கோவை சரளாவை எல்லோரும் ‘அக்கா’, ‘அம்மா’ என்று கூப்பிடுகிறார்கள். நான் எப்படி கூப்பிடுவது என்று தெரியவில்லை. சரளா பாப்பாவைத்தான் எனக்கு தெரியும். இதில் நன்றாகவும் நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவை போல தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நான் நடிப்பு வாய்ப்பு தேடிய காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள்.
“என்ன சார் கோவணத்தையெல்லாம் கட்டிக்கிட்டு..?” என சொன்னார்கள். ஆனால் இப்போது அதை கொண்டாடுகிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில்தான் இருக்கிறது. இப்போது ‘16 வயதினிலே’ படத்தை பேசுகிறார்கள், அதுதான் பெரிய படம். “இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம்..?” எனக் கேட்டால் அது பெரிய படம் இல்லை..
இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார் பிரபு சாலமன். அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்து பார்த்தேன். நாஞ்சில் சம்பத்தின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா வொர்க் மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும். படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும்.
நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள். அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக் கொள்ள தயாராக இருங்கள்.
இது நல்ல படம். இது வெற்றிப் படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். இந்த செம்பி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.” என்று வாழ்த்தினார்.