full screen background image

நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது..!

நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது..!

சென்னை தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது தெரிந்ததே. நேற்றுதான் இதற்கான டெண்டர் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 

இந்த நிலையில் அந்த வளாகத்தின் பின் பக்கம் 33 அடி அளவிற்கு பொதுவான சாலை இருந்தது என்றும், அதனையும் காலப்போக்கில் நடிகர் சங்கத்தினர் ஆக்கிரமித்து எல்லைச் சுவர் எழுப்பிவிட்டதாக அந்தப் பகுதியில் வசித்தவர்கள் புகார் கூறினர்.

அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர், இது குறித்து ஏற்கெனவே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர்.

மேலும், ”நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக நடிகர் சங்கமும், மனுதாரரும் இணைந்து ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் கே.இளங்கோவன் கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து மே 29-ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும்வரை அந்த இடத்தில் புதிய கட்டுமானப் பணிகளை எதையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று  உத்தரவிட்டார்கள்.

இதையடுத்து நடிகர் சங்கப் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டபோது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடந்த கிரீன் பார்க் ஹோட்டலுக்கே நேரில் வந்து புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்துவிட்டுப் போனார்கள்.

அதோடு, அந்த இடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நாங்கள் எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பு அளிப்போம் என்று பத்திரிகையாளர்களிடத்தில் சொல்லிவிட்டும் போனார்கள்.

ஆனால் இப்போது விவகாரம் கோர்ட் படியேறிவிட்டது. இந்த 33 அடி ஆக்கிரமிப்பு விவகாரம்கூட இதுவரையிலும் வெளியில் சொல்லாமலும், தெரியப்படுத்தப்படாலும் இருந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது நாளில்தான் வெளியில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் பார்க்கும்போது அன்னிய சக்திகள் சில தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இப்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக இதனை தூண்டிவிட்டுள்ளனர் என்று மட்டும் தெரிகிறது..!

பார்ப்போம்.. என்ன நடக்கிறதென்று..?

Our Score