”இன்றைய சூழலில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பொருளாதார நிலையை தகுதியாக நிர்ணயிக்காமல் சாதியை ஒரு தகுதியாக உறுதி செய்து வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுதான் காரணம். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால் சட்டத்தினைத் திருத்தம் செய்து, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” என ‘ஓங்காரம்’ எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் அப்படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.கேந்திரன் கூறுகிறார்.
‘அய்யன்’, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’.
இந்தப் படத்தை யெல்லோ சினிமாஸ் புரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஈ.கௌசல்யா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ரேகா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இயக்குநரான ஏஆர்.கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான், சிவக்குமார், டெல்டா வீரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
சாம் கே.ரொனால்ட் ஒளிப்பதிவு செய்ய, வி.டி.பாரதி மற்றும் வி.டி.மோனிஷ் என்ற இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ஞானகரவேல் அனைத்து பாடல்களையும் எழதி இருக்கிறார். நடனப் பயிற்சி இயக்கம் – தீனா மாஸ்டர், கலை இயக்கம் – ஜெயசீலன், படத் தொகுப்பு – வி.எஸ்.விஷால், பத்திரிகை தொடர்பு – கோவிந்தராஜ் / சிவக்குமார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கேந்திரன் முனியசாமி பேசும்போது, ” மதுரை மாநகரை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. மதுரையில் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் உயர்கல்வி கற்கும் நாயகிக்கு, அக்கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் குரல், பணபலம், அதிகார பலத்தால் நசுக்கப்படுகிறது.
இந்நிலையில் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் ‘புலி’ எனும் கதாபாத்திரத்திடம் தன்னுடைய மனக் குமுறலை வெளிப்படுத்துகிறார். நாயகிக்கு – பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக புலி எனும் கதாபாத்திர மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களும், அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளும்தான் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, அதனை உறுதியாகவும், உடனடியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விசயம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அத்துடன் தனியார் கல்லூரிகளில் உயர் கல்வி கற்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடைபெற அங்கிருக்கும் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடுதான் காரணம் என்ற அம்சத்தையும், இதற்கு மாற்றாக பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ஆலோசனையும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இட ஒதுக்கீடு மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்திய திரைப்படம் என்றாலும், இந்த ‘ஓங்காரம்’ படம் காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்சியல் அம்சங்கள் நிறைந்த பொழுது போக்கு திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.” என்றார்.
தற்போது ‘ஓங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த ‘ஓங்காரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.