full screen background image

கேப்டன் – சினிமா விமர்சனம்

கேப்டன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தில் ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

D.இமான் இசையமைக்க, கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்  E.ராகவ் பட தொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டை இயக்கம் செய்துள்ளார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றியிருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன்.

ஏலியன்களுக்கும், மனிதர்களுக்குமான போரில் இறுதியில் வென்றது யார் என்பதுதான் இந்தக் ‘கேப்டன்’ படத்தின் கதைக் கரு.

இன்னமும் திருமணமாகாத வெற்றிச்செல்வன்’ என்ற ஆர்யா, இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருக்கிறார். பல ராணுவ ஆபரேஷன்களில் கலந்து கொண்டு எதிரிகளை வீழ்த்திய அனுபவம் கொண்டது இவரது அணி.

தற்போது இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் காட்டுப் பகுதியில் ‘செக்டார்-42’ என்ற மனித நடமாட்டமே இல்லாத வனப் பகுதிக்குள் சென்ற ராணுவ வீரர்கள் மர்மமான முறையில்  கொல்லப்படுகிறார்கள். இந்த மர்மக் கொலைகளைக் கண்டறிவதற்காக ஆர்யா தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு அனுப்பபடுகிறார்கள்.

ஆர்யா டீம் அங்கே சென்றபோதுதான் ராணுவ வீரர்கள் ‘ஏலியன்கள்’ என்ற வினோத மிருகத்தின் தாக்குதலினால் இறந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.  

இந்த ஏலியன்களை கொல்லும் பணியும் ஆர்யா தலைமையிலான குழுவுக்கு கொடுக்கப்பட்ட.. இந்த ஆபரேஷன் வெற்றியடைந்ததா, இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ராணுவ வீரனுக்கே உரித்தான தோற்றத்தில் ஆர்யா கெத்தாக தெரிந்தாலும் நடிப்பென்று வரும்போது தன் தனித்திறனைக் காட்டவில்லை. இவரது நடிப்புக்குத் தீனி போடும் காட்சிகளும் திரைக்கதையில் இல்லை என்பதால் சார்பட்டா பரம்பரை’யில் பார்த்த ஆர்யாவில் கால் பகுதியைக்கூட இதில் பார்க்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஒரேயொரு ஆறுதல் ஐஸ்வர்யாவை லஷ்மியைப் பார்க்கப் போகும்போது இவர் காட்டும் அமைதி காப்புப் படையின் கேப்டன் போன்ற நடிப்புதான்.

ஐஸ்யவர்யா லக்ஷ்மிக்கு மிகப் பெரிய கதாப்பாத்திரம் இல்லை. திரைக்கதையின் முடிச்சு அவிழ்வதற்கு கடைசியில் பயன்படு்த்தப்பட்டிருக்கிறார். ஆர்யாவைப் பார்க்காமலேயே காதல் கொண்ட இவரது செயலில் ஒரு நியாயமும் இல்லை.

விஞ்ஞானி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார். முதலில் தேசப்பற்று மிக்கவராக வந்து கடைசியில் மக்கள் துரோகியாகவே காண்பிக்கப்படுகிறார். இவரது கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம். அந்த ஆலை சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் குழப்படி தருவதால் “என்ன சிம்ரன் இதெல்லாம்?” என்று இவரிடமே கேட்க வேண்டியுள்ளது.

மேலும் காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல்நாத், ஆதித்யா மேனன் ஆகியோரும் படத்திற்குத் தேவையான நடிப்பை மட்டுமே கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் யுவாவின் ஒளிப்பதிவில் கதைக்குத் தகுந்தாற் போன்றுதான் காட்சியமைப்புள் இருக்கின்றன. காட்டுப் பகுதிகளை காட்சிப்படுத்தும்போது இன்னும் நிறையவே அழகுபடுத்தியிருக்கலாம். அதோடு ஏலியன்களின் தாக்குதலை சாதாரணமான சண்டை காட்சிபோல் படமாக்கியிருப்பதால் இந்த வினோத மிருகத்தின் இம்பாக்ட் ரசிகர்களைத் தொடவில்லை.

காதல் காட்சிகளும், பாடல்களும் இந்தப் படத்தின் கதைக்குத் தேவைப்படவில்லை. திணிக்கப்பட்டது போலவேதான் தெரிகிறது. டி.இமான் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்து மிரட்டியிருக்கலாம்.

‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’, ‘டெடி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ‘மிருதன்’ படத்தின் மூலம் ஜாம்பிஸை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தவர் இப்போது இந்த ‘கேப்டன்’ படம் மூலம் ஏலியன்ஸை அழைத்து வந்துள்ளார். புது முயற்சி வரவேற்க வேண்டியதுதான்.

ஆனால், 1987-ம் ஆண்டு ‘PREDATOR’ என்ற பெயரில் அர்னால்டு நடித்து உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படத்தின் கதைக் கருவையைக் கையாண்டு எடுத்த இந்தப் படம், அந்த ஹாலிவுட் படம் கொடுத்த பீலிங்கில் 10 சதவிகிதத்தைக்கூட தரவில்லை என்பதுதான் உண்மை.

நமது தமிழ்ப் பட பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் இதைவிட மிக சிறப்பான ஏலியன்ஸ்களை பல்வேறு ஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்தப் படத்தின் கிராபிக்ஸ், அனிமேஷன் குழு கொடுத்தது வெறும் சோளப் பொரிதான்.

படத்தின் உயிரோட்டமான ஏலியன்ஸ் மற்றும் அவற்றின் பூர்வாசிரம கதையை அழுத்தமாகச் சொல்லாமல் சஸ்பென்ஸில் வைத்து சொல்லியிருப்பதால் ரசிகர்களால்  ரசிக்க முடியவில்லை.

ஏலியன்ஸ் என்ற ஒன்று கிடைத்தவுடன் இந்திய ராணுவத்திலும், இந்தியாவிலும் ஒரு அதிர்ச்சிகூடவா ஏற்படவில்லை…? மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்திருக்க வேண்டுமே..? அந்த ஏலியன்ஸை அழிப்பதற்காக மீண்டும் அதே காட்டுப் பகுதிக்கு ஆர்யா தலைமையில் அதே 4 பேர் கொண்ட குழுவை மட்டுமே திருப்பியனுப்புகிறார்கள் என்பதெல்லாம் ஏற்கவே முடியாத செயல்.

இல்லையென்றால் முதல்முறையாக ஆர்யா குழு உள்ளே நுழைந்தபோதே ஏலியன்ஸுடன் சண்டை ஏற்பட்டு கடைசிவரையிலும் அந்தக் குழுவினர் உள்ளேயே இருப்பதுபோல திரைக்கதை அமைத்திருந்தால்கூட நிச்சயமாகப் பாராட்டியிருக்கலாம். ஆனால், இது நிச்சயமாக போங்காட்டம்தான்.

படத்தில் சுவாரஸ்யமே அந்த எலியன்தான். அந்த வித்தியாசமான உயிரினத்தை காட்டுவதிலும், அவற்றுக்கும், ஆர்யா டீமுக்குமான சண்டை காட்சிகளிலும் சத்தில்லாமல் இருப்பதால் விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லாமல் போய்விட்டது.

ஆர்யா டீம் ஏலியன்ஸ்களால் தாக்கப்படும் காட்சிகளில் நமக்கு எந்த அதிர்வுகளும் ஏற்படவில்லை என்பது இயக்கத்தில் இருக்கும் குறைதான்.

ஏலியன்ஸ்களின் பூர்வாசிரம கதையை இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சியில் ஏலியன்ஸின் தாயாக ஆக்டோபஸைக் காட்டிவிட்டு அதற்கொரு கதையைச் சொல்வதும், தாயைக் கொன்றுவிட்டு முட்டைகளை மட்டும் உடைக்காமல் விட்டுவிட்டு வந்து இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்திருப்பதெல்லாம் முட்டாள்தனமாகவே தெரிகிறது.

மொத்தத்தில் இந்தக் ‘கேப்டன்’ படம் தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என்றாலும், எதிர்பார்த்தும், எதிர்பார்க்காமலும் சென்ற ரசிகர்களுக்கு ஏலியன்ஸ்’ என்ற புது உயிரினத்தை மட்டும் காட்டிவிட்டு மற்றபடி பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

RATING : 3 / 5

Our Score