full screen background image

பிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..!

பிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..!

UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சுஜீத் எழுதி இயக்கியிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘சாஹோ.’

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சரேகர் மற்றும் சங்கி பாண்டே உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

மிகப் பிரம்மாண்டமான திரைக் காவியத்தை படைக்கும் நோக்கில், ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தி வரும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், திரையுலகின் மிக சிறந்த படைப்பாளிகளை இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.  

ஒளி இயக்குநர் மதி, தனது நிபுணத்துவ குழுவுடன் ஒளிப்பதிவை ஏற்றுக் கொள்ள, தொகுப்பாக்கம் பல்துறை திறமையாளர் ஸ்ரீகர் பிரசாத் வசமும், தயாரிப்பு வடிவமைப்பு சாபு சிரில் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

உயர்தரமான அதிநவீன அதிரடி காட்சிகளை சிறப்பாக படமாக்க, ‘சாஹோ’ உலகப் புகழ் பெற்ற, சண்டை காட்சி நிபுணத்துவ இயக்குநர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளது.

இத்திரைப்படம் பல்வேறு ரம்மியமான புதிய இடங்களில், இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.  

‘பாகுபலி(தி கண்க்ளூஷன்)’ வெளியீட்டுடன் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டதில், ஒரு அதி நவீன தொழில் நுட்ப பின்னணியில், முற்போக்கு  சூழலில் பிரபாஸ் ஒரு எதிர்மறையான, வில்லத்தனமான கதாபாத்திரத்தில் காட்சியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்தியாவின் வட மாநிலங்களில் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்)  மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான இந்த ‘சாஹோ’விற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhushan Kumar

மும்மொழி திரைப்படமான இந்த ‘சாஹோ’வை, பாலிவுட்டின் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரான பூஷன் குமார் வட இந்திய மாநிலங்களில் வெளியிடுகிறார் என்பது புதிய செய்தியாகும்.

இது தொடர்பாக பூஷன் குமாரின் TT சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் ‘சாஹோ’ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.  

இது குறித்து தயாரிப்பாளர் பூஷன் குமார் பேசும்போது, “சாஹோ’வின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது. பிரபாஸ் ஒரு அகில இந்திய நட்சத்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும், உலக தரத்தினை விஞ்சியதாக அமைந்துள்ளது.  இது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். பெருமை கொள்கிறோம்…” என்றார்.

சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இது பற்றிப் பேசும்போது, “ஆரம்பத்திலிருந்தே ‘சாஹோ’ ஒரு மாபெரும் காவியச் சித்திரமாகவே உருப்பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஒரு திரைக் காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்…” என்றார்.

மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இந்த ‘சாஹோ’ திரைப்படம் அடுத்த வருடம் வெள்ளி திரைக்கு வரவிருக்கிறது.

Our Score