full screen background image

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..!  

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..!  

எந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வகிப்பதுபோல, போதை மயக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும், கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாகப் பேசும் ஒரு படம்தான் ‘போதை ஏறி புத்தி மாறி’.

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

குறும் படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். 

அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே.பி. இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத் தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.

படத்தின் தலைப்பே மொத்த படத்தைப் பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும்.

படம் பற்றி இயக்குநர் கே.ஆர்.சந்துரு பேசுகையில், “தீரஜ் என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் குறும் படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குநர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குநர்களுக்கு  ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார். 

இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும்போதே, அந்த படத்தில் பிருந்தாவாக நடிக்க ஒப்புக் கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதாபாத்திரமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக  அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

மிகவும் பிஸியாக இருந்தபோதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது..” என்றார் இயக்குநர் கே.ஆர்.சந்துரு.

Our Score