full screen background image

‘பெல் பாட்டம்’ படத்தில் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா-சத்ய சிவா கூட்டணி..!

‘பெல் பாட்டம்’ படத்தில் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா-சத்ய சிவா கூட்டணி..!

நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இருவரும் இணைந்து ‘கழுகு’, ‘கழுகு-2’ என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக  இணைகிறது. இப்படத்திற்கு ‘பெல் பாட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப் பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NH Hari Silver Screens நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் H. சார்லஸ் இம்மானுவேல் இந்த ‘பெல் பாட்டம்’ படத்தைத் தயாரிக்கிறார்.

‘குற்றம்-23’, ‘மகாமுனி’ போன்ற படங்களில்  வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற மஹிமா நம்பியார் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

காமெடி நடிகர் சரவணன் உட்பட தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

‘பியார் பிரேமா காதல்’, ‘கரம் மசாலா’, ‘டிக்கெட்’ ஆகிய படங்கள் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான ராஜா பட்டாசார்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தனது தனிச் சிறப்பான பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசை மூலமும் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் சாம் C.S. இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘வழக்கு எண் 18/9’, ‘தனி ஒருவன்’, ‘1945’, ‘டோரா’, ‘கழுகு-2’ புகழ் கோபி கிருஷ்ணா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த ‘பெல்பாட்டம்’ திரைப்படம் முந்தைய கால ரெட்ரோ  பின் களத்தில் நடப்பதாக  கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய்,  தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, ‘திவாகர்’ எனும் பாத்திரத்தில்  கிருஷ்ணா நடிக்கிறார்.

கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை நாயகன் திவாகர் விசாரிக்கத் துவங்க… அந்த வழக்கு பல எதிர்பராத சிக்கல்களையும், திருப்பங்களையும் கொண்டு வருகிறது. இவை அத்தனையையும் மீறி அந்த வழக்கின் மர்மத்தை ஆராய்ந்து கண்டு பிடிப்பதுதான் இப்படத்தின் கதை.

ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்தேறுவதில்லை. இதற்காக திவாகர் சந்திக்கும் விவகாரமான, வித்தியாசமான மனிதர்கள்.. அவர் மனதை இளக்கி காதலில் விழச் செய்யும் சட்டத்திற்கு புறம்பாக சரக்கு விற்கும் குஷ்மா… இந்த  பாத்திரங்கள் எல்லாம் வழக்கு விசாரணையில் குறுக்கே வருகிறார்கள்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள NH Hari Silver Screens நிறுவனம் மாறுபட்ட கதைக் களங்களை கொண்ட, தரமான படங்களை தயாரிப்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘தீதும் நன்றும்’ திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சத்யசிவா தற்போது நடிகர் ராணாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள ‘1945’ படமும் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் விரைவில் வெளியாகவுள்ளது.

Our Score