“பயம் ஒரு பயணம்’ படத்தை தனியாக பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை..” என்கிறார் இயக்குநர் மணிஷர்மா
‘தி எக்ஸ்சார்சிஸ்ட்’, ‘தி கிரட்ஜ்’, ‘தி ஓமென்’, ‘தி கான்ஜுரிங்’ என்ற ஆங்கில திகில் படங்களின் பெயர்களை உச்சரிக்கும்போது, நம்மை அறியாமலேயே நம் உள்ளங்களில் ஒருவித பயம் குடிகொள்கிறது.
‘இந்த உலகில் நம்மை மீறிய அமானுஷிய சக்தி இருக்கிறது..’ என்ற கருத்தை, இந்த படங்கள் அனைத்துமே மக்களின் உள்ளங்களில் விதைத்திருப்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.
தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது ‘ஆக்டோஸ்பைடர் புரொடக்ஷன்’ சார்பில் எஸ்.துரை மற்றும் எஸ்.சண்முகம் தயாரித்து, அறிமுக இயக்குநரான மணிஷர்மா இயக்கியிருக்கும் ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம்.
தமிழ் சினிமா இதுவரை கண்டிராத திகில் படமாக உருவெடுத்து இருக்கும் ‘பயம் ஒரு பயணம்’ படத்தில் டாக்டர் பரத் – விஷாகா சிங் – மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஒய்.ஆர். பிரசாத்தின் (இசையமைப்பாளர் மணிஷர்மாவின் சகோதரி மகன்) திகிலூட்டக் கூடிய பின்னணி இசையானது ‘பயம் ஒரு பயணம்’ பார்க்கும் ரசிகர்களை பயத்தில் உறைய வைக்கும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு கலப்படம் இல்லாத திகில் படமாக எங்களது ‘பயம் ஒரு பயணம்’ படம் இருக்கும். இந்தப் படத்தில் காமெடிக்கு நாங்கள் சிறிதளவுகூட இடம் கொடுக்கவில்லை, மாறாக ‘பயம் ஒரு பயணம்’ பயணத்தை பார்க்க இருக்கும் ஒவ்வொரு ரசிகர்களும், ‘திகில்’ என்னும் ஒரு வழி பாதையில் பயணிக்க வைக்கும்.
‘தி எக்ஸ்சார்சிஸ்ட்’ மற்றும் ‘தி ஓமென்’ படங்கள் வெளியாகிய காலங்களில், அந்த படங்களை யார் தனியே உட்கார்ந்து பார்க்கிறார்களோ, அவர்களுக்கு பரிசெல்லாம் கொடுத்தார்கள். அதே பாணியை நாங்களும் இந்த ‘பயம் ஒரு பயணம்’ பட ரிலீஸின்போது கடைபிடிக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.
ஆனால் ‘பயம் ஒரு பயணம்’ படத்தை தனியாக அமர்ந்து பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, அதையும் மீறி பார்ப்பவர்கள், பயத்தில் இருந்து மீள்வதற்கே சில நாட்கள் ஆகும்…” என்கிறார் ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் இயக்குநரான மணிஷர்மா.
அதையும்தான் பார்த்திருவோமே..?!











