மலையாளத்தில் வரலாறு காணாத வசூலை குவித்து கேரளாவிற்கு வெளியேயும் பெரும் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேய்ஸ்’(BANGALORE DAYS) திரைப்படத்தை தற்போது தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் பி.வி.பி. சினிமா தயாரித்திருக்கிறது.
தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்த தமிழ் இயக்குநர் ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் FIRST LOOK இன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்து லைக்குகளை குவித்துக்கொண்டிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் ஜொலிக்கும் (MULTI STARRER) படமாக உருவாகி சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது விருந்து படைக்க காத்திருக்கிறது.
இதில் கனவு நாயகன் ஆர்யா, ‘பாகுபலி’யில் பட்டைய கிளப்பிய ராணா, ‘ஜிகர்தாண்டா’வில் வர்ணஜாலம் காட்டிய பாபி சிம்ஹா எல்லோருக்கும் பிடித்த ஸ்ரீதிவ்யா, சமந்தா, பார்வதி, ராய் லட்சுமி, மற்றும் பிரகாஷ் ராஜ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே அணி வகுத்திருக்கின்றன.
மலையாளத்தில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் புதிய இசையமைப்பாளர் கோபி சுந்தர் புதிய பரிமாணத்தில் இசையை தந்திருக்கிறார். கதிரின் கலை வண்ணத்தில் கே.வி.குகனின் அட்டகாச ஒளிப்பதிவில் ‘பொம்மரிலு’ பாஸ்கர் கதாபாத்திரங்களின் நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக இயக்கியிருக்கிறார்.
மூன்று உறவினர்கள் தங்களுக்குள் அன்பையும் நட்பையும் கொண்டாட்டங்களையும் எப்படி எற்படுத்தி கொண்டார்கள் என்பதையும் அவர்களுக்கு வரும் வாழ்க்கை மாற்றங்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் பெங்களூர் நகர பின்னணியில் மிக ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள்.
வழக்கமாக நண்பர்களின் வாழ்க்கையையும், நட்பையும் பற்றி மட்டுமே பார்த்த தமிழ் சினிமாவில் இந்த உறவினர்களின் கதையை படமாக பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பார்க்கும் படமாகவும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை அனைவருக்கும் தங்களுடைய வாழ்க்கையோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் கதையாகவும் அமைந்திருப்பது இந்த படத்தின் பலம். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஒட்டி பயணிக்கிற ‘பெங்களூர் நாட்கள்’ மொத்தத்தில் ஒரு குடும்ப விருந்து.
பி.வி.பி. நிறுவனம் பிரமாண்டமாய் தயாரித்திருக்கும் இப்படம், வரும் 2016 பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.