Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ‘பரோஸ்’, திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று மாலை சாந்தம் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.,
இந்நிகழ்வில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா பேசும்போது, “மோகன்லால் சாருடன் ‘புலி முருகன்’ படத்தில் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டி-யில்தான் பார்த்திருக்கிறேன். இன்றுதான் இங்கு டிரெய்லரை 3டி-யில் பார்த்தேன்.
இந்தளவு நேர்த்தியான ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் இதுவரையிலும் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப் படத்தில் பணியாற்றியது மிகப் பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரிந்த பிறகுதான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக்கு முன்னால், பின்னால் என்றே சொல்லலாம். அவரில்லாமல் நான் இல்லை. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.
இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். ‘பரோஸ்’ என்னுடைய அறிமுகத் திரைப்படம், இது மோகன்லால் சாரின் முதல் படைப்பு. அவர் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், இந்த ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார் வாழ்த்துகள்.
2019-ம் ஆண்டில் அமெரிக்காவில் நான் ஒரு இசை போட்டியில் வெற்றி பெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் சார்தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப் படம் பற்றிச் சொல்லி, இந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்றார். மிகப் பெரிய சந்தோசம். கோவிட் வந்தது. அந்த தடைகளைத் தாண்டி, இப்போது படம் வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் இசையை நிறையவே கற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லால் சாருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி..” என்றார்.
கிரியேடிவ் ஹெட் ராஜிவ் குமார் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது ஏதேச்சையான ஒரு அதிசயம். இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்து, முழுமையான 3டி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி.
அவர் எப்போதும் எனக்கு இனிய நண்பராக இருந்து வருகிறார். அவருடைய கற்பனையை உருவாக்கும் இந்தப் படத்தில் பணிபுரிந்தது, நல்ல அனுபவமாக இருந்தது. மோகன்லால் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார். முக்கியமாக டெக்னாலஜுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் நிறைய டெக்னாலஜு இருக்கிறது, ஆனால் அதைத் தாண்டி நடிகர்களின் நடிப்பு தான் உங்களைக் கவரும். இந்தப் படம் பார்க்கும் போது நீங்கள் 3டி என்பதை மறந்து விடுவீர்கள்.
மோகன்லால் மிகச் சிறந்த நடிகர், அவர் உருவாக்கிய ஃபேண்டஸி கதாப்பாத்திரங்களுடன் அவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். லிடியன் இத்தனை இளம் வயதில் முதிர்ச்சியான இசையைத் தந்துள்ளார். பாலா மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பல மொழிகளில் அவர்தான் டயலாக்கை எழுதியுள்ளார். இப்படம் மிக அர்ப்பணிப்புடன் மிகப் பெரிய உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி..” என்றார்.
நடிகர், இயக்குநர் மோகன்லால் பேசும்போது, “நான் கடந்த 47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவுதான்.
இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டி-யில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம் பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து நீங்கள் பார்க்கும்போது, புது அனுபவமாக இருக்கும்.
இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச் சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
லிடியன் முதன்முதலில் எங்களைப் பார்க்க வந்தபோது அவருக்கு 13 வயது தான், மிகச் சிறந்த இசையைத் தந்துள்ளார். 2 நடிகர்கள்தான் இந்தியா. மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரிட்டிஷ் குழந்தைதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால்தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச் சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போதுகூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்களை வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம்.
மிகப் பெரிய உழைப்பினை போட்டுள்ளோம். பாலாவும் மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்…” என்றார்.
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மோகன்லால்.
‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ் பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.









