பல்வேறு காரணங்களால் ஒரு திரைப்படமானது மக்கள் மனதில் வெற்றி பெற்று இருந்தாலும், வியாபார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் அந்த படத்தை வெற்றி பெற செய்யும் திறமை விநியோகஸ்தர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.
அந்த வகையில், தங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்துவமான கதை களங்களால், விநியோகஸ்தராக சினிமா துறையில் அடியெடுத்து வைத்த ‘ஆரா சினிமாஸ்’, வெற்றிகளை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையையும் வெகுவாக சம்பாதித்து வருகிறது.
சினிமா துறையில் பல ஏற்றங்களையும், இறக்கங்களை சந்தித்த ஆரா சினிமாஸின் உரிமையாளர் மகேஷ் கோவிந்தராஜ் தற்போது தங்களுடைய நெட்வர்க்கை மேலும் விரிவுபடுத்திக் கொண்டே போகிறார் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
இப்படி வெற்றி பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஆரா சினிமாஸின் அடுத்த பட வரிசையானது அவர்களுக்கு மாபெரும் வெற்றியையும், புகழையும் வாங்கி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“ஒரு விநியோகஸ்தராக எங்களின் ஆரா சினிமாஸ் சில ஏற்றத் தாழ்வுகளை சந்தித்திருக்கிறது. அந்த ஏற்ற இறக்கங்களை எங்களின் வளர்ச்சி பாதைக்கு வித்தாக அமைகின்ற உரமாகத்தான் நாங்கள் கருதுகிறோம். சிறிய நட்சத்திர கூட்டணியோடும், வலுவான கதையம்சத்தோடும்தான் நாங்கள் ஆரம்ப காலத்தில் விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்தோம்.
ஆனால் தற்போது நாங்கள் மிகப் பெரிய நட்சத்திர கூட்டணியோடு களம் இறங்கி இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
விக்ரமின் ‘இருமுகன்’, விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’, பிரபு தேவாவின் ‘தேவி’ மற்றும் கிருஷ்ணாவின் ‘பண்டிகை’ என நாங்கள் அடுத்தடுத்து விநியோகம் செய்யவிருக்கும் படங்கள் அனைத்துமே எங்கள் நெஞ்சத்தில் புது நம்பிக்கையை விதைத்துள்ளது.
எங்களின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ள தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் ஆரா சினிமாஸின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
வர்த்தக ரீதியாக ஒரு படத்தை வெற்றி செய்வதற்கு பல நுணுக்கங்கள் இருந்தாலும், நான் சினிமா மீது வைத்திருக்கும் பற்றும், காதலும்தான் அந்த வெற்றிக்கு முக்கிய தூணாக செயல்படும். தலை சிறந்த நட்சத்திர கூட்டணி, வலுவான கதை அம்சம், பிரம்மாண்டமான விளம்பரமும்தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணி வேர்.
அந்த வகையில் எங்களின் ஆரா சினிமாஸிற்கு இனி வரும் காலம் வசந்த காலம்தான்..”என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆரா சினிமாஸின் உரிமையாளர் மகேஷ் கோவிந்தராஜ்.