full screen background image

அரிமாபட்டி சக்திவேல் – சினிமா விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Life Cycle Creations நிறுவனத்தின் சார்பில்  தயாரிப்பாளர் பவன்.K மற்றும் அஜிஸ்.P ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நாயகனாக புதுமுகம் பவன்.K நடிக்க, நாயகியாக மலையாள நடிகை மேகனா எலேன் நடித்துள்ளார். ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் சார்லி நடித்துள்ளார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, Super good சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், Hello கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி உட்பட மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இயக்கம் – ரமேஷ் கந்தசாமி, கதை & திரைக்கதை, வசனம் – பவன்.K., தயாரிப்பு –அஜிஷ்.P. & பவன்.K., இசை – மணி அமுதவன், ஒளிப்பதிவு – J.P.மேன், படத் தொகுப்பு – R.S.சதிஸ் குமார், கலை இயக்குநர் – கபாலி கதிர்.K., ஆடை வடிவமைப்பு  – பழனி அம்மாவாசை, நடன இயக்கம் – மது, சண்டைப் பயிற்சி இயக்கம் – பில்லா ஜெகன், பாடல்கள் – மணி அமுதவன், நிர்வாக தயாரிப்பு  – விக்கி, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.

இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராகப் பணியாற்றிய,  ரமேஷ் கந்தசாமி இப்படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படம் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவில், முசிறி அருகேயிருக்கும் அரிமாபட்டி என்ற கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராமமே தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வரையறுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் பிறந்து வளர்ந்த நாயகன் அந்தக் கட்டுப்பாட்டை மீறும்போது நாயகனுக்கும்  ஊருக்கும்,  இடையில் நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை  மையக் கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் மறு பக்கத்தை, ஜாதியை வைத்து ஏற்றத்தாழ்வு பார்க்கும்  சில மனிதர்களின் முகத்தை தோலுரித்து காட்டும் படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய,  அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் மாறாத இந்தச் சமூகத்தை பரிதாபத்துடன் கவனிக்கும் குறியீடாக,  சிறைக் கம்பிகளுக்கு வெளியில் நின்று, கிராமத்தின் பஞ்சாயத்தை கவனித்து பார்க்கும் வகையில் உருவான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கே, படம்  சொல்ல வரும் கருத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பினை ஏமாற்றாத வகையில் படமும் அமைந்திருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் முசிறிக்கு அருகில் இருக்கும் ஒரு குக்கிராமம் அரிமாபட்டி. இப்போதும் முத்தரையர் ஜாதியை சேர்ந்த மக்களே அதிகம்பேர் இந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். ஜாதிக் கட்டுப்பாட்டுக்கு பெயர் போன ஊர் இது..!

அந்த ஊரில் வசிக்கும் யாராவது ஜாதிவிட்டு ஜாதி மாற்றித் திருமணம் செய்தால் அந்தக் குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அந்தக் குடும்பத்துடன் பேச்சுவார்த்தையோ, கொடுக்கல்.. வாங்கலோ.. எதையும் ஊர்க்காரர்கள் செய்ய மாட்டார்கள். இதை மீறுபவர்கள் ஊரிலேயே இருக்க முடியாதபடிக்கு டார்ச்சர் செய்வார்கள். இது இப்போதும் நடந்து வருகிறது.!

இதே கிராமத்தைச் சேர்ந்த நாயகனான சக்திவேல்’ என்னும் புவன் இப்போது சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். எப்படியாவது தனித்துப் படம் இயக்கிவிட வேண்டும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், தன்னுடன் பள்ளிப் பருவத்தில் இருந்தே படித்து வந்த நாயகி ‘கவிதா’ என்னும் மேக்னா எலனைக் காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் வேறு, வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் காதலுக்கு மேக்னாவின் அண்ணன் பிர்லா போஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இதனால், வேறு வழியில்லாமல் நாயகன் புவன், மேக்னாவை பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்.

இதையறிந்து அரிமாபட்டி ஊரே கொதித்து எழுகிறது. நாயகனைத் தேடி அவரது குடும்பமே சென்னைக்கு வந்து அலைகிறது. இன்னொரு பக்கம் நாயகியைத் தேடி அவரது அண்ணன் தன் அடியாட்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார். அரிமாபட்டி ஊர்க்காரர்களோ நாயகனை ஊருக்குள்ளே விடக்கூடாது என்று ஊர்க் கூட்டத்தில் தீர்மானம் போடுகிறார்கள்.

நாயகனின் தாத்தா திடீரென்று இறந்து போக, தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்தப் போகும் நாயகனை அப்படியே திருப்பியனுப்புகிறார்கள். நாயகனின் குடும்பமும் ஒன்று சேர்ந்து நாயகனை ஊருக்குள் வர வேண்டாம் என்று தடுக்கிறது.

இன்னொரு பக்கம் நாயகியை கொலை செய்தாலும் தப்பில்லை என்று பிர்லா போஸின் உறவினர் கூட்டம் அலைகிறது.

இதையெல்லாம் தாண்டி முடிவு என்னவாகிறது..? நாயகனும், நாயகியும் நிம்மதியாக வாழ்ந்தார்களா..? உயிருடன் இருக்கிறார்களா..? அரிமாப்பட்டி ஊர்க்காரர்களின் நிலைமை என்ன..? நாயகனின் குடும்பத்தினர் என்னவானார்கள்..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

புதுமுக நாயகனான புவன் தன்னுடைய சொந்தக் கதையை, தன்னுடைய நடிப்பில், தன்னுடைய சொந்த அண்ணனின் தயாரிப்பில் இப்படியொரு படமாக உருவாக்கியுள்ளார்.

முதல்முறையாக கேமிரா முன்பாக நிற்கிறார் என்ற உணர்வெல்லாம் இல்லாமல் மிக இயல்பாக, கிராமத்து மனிதனாக, இளைஞனாக, காதலனாக, ஒரு மகனாக தனது சிறப்பான நடிப்பைக் காண்பித்துள்ளார் நாயகன் புவன்.

பிரச்சினைகள் வந்தவுடன் அதை எதிர்கொள்ளும் பக்குவத்துடன் அணுகும்போது நமக்கு பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றத்தைத் தருகிறார் புவன். காதல் காட்சிகளில் தன் முகத்துக்கு எது வருமோ, அதை மட்டுமே செய்து இது அறிமுகமில்லாத, ஒரு நாயகனின் நடிப்பு என்பதை நினைவுபடுத்தியிருக்கிறார்.

தனது வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்க்க முடியாமல் வெறுப்புடன் செல்பவரை வம்பிழுக்கும் ஜாதிக் கும்பலை போட்டுத் தாக்கும்போது “கூட ரெண்டு சாத்து சாத்துங்க..” என்று நமக்கே கொதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அந்தக் காட்சியில் தத்ரூபமாக ஒரு அபலை கதாப்பாத்திரத்தை நம் கண் முன்னே காண்பிக்கிறார் புவன்.

தாத்தாவின் முகத்தைக்கூட பார்க்கவிடாமல் தடுக்கும் தனது அப்பாவைக்கூட கேள்வி கேட்க முடியாத சூழலில் கண்ணீருடன் திரும்பும் காட்சியில் மனதைத் தொட்டுவிட்டார். மிக இயல்பான, கிராமத்துக் கதாப்பாத்திரத்திற்கு இந்த அறிமுக நாயகன் புவன் மிகப் பொருத்தமாக இருப்பார்.

நாயகியாக மேக்னா எலன். வித்தியாசமான உருளை முகத்துடன், பல சின்ன பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்த அனுபவம் உள்ளவர். காதல் காட்சிகளில் நம் கண்ணைவிட்டு அகலவிடாத வண்ணம் கவர்ச்சி காட்டாமல் முக அழகிலேயே, அதிலும் கண்ணாலேயே நம்மைக் கவர்ந்திழுக்கிறார். இறுதியில் வழக்கம்போல ரத்தம் சிந்தி, ஒட்டு மொத்த உச்சு கொட்டுதலையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறார்.

குணச்சித்திர நடிக வேடத்தில் அண்ணன் சார்லி அனைவரையும் முந்திக் கொண்டுவிட்டார். மகனைப் பார்க்க விரும்பாமல் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்ளும்போதும், தனது தந்தையின் இறப்பின்போது மகனை “திரும்பி போயிரு..” என்று கெஞ்சி, மிரட்டி அனுப்பவிட்டு தனியாக அழும்போதும், அந்த அப்பா கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கியறார் சார்லி அண்ணன். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

சார்லியின் மனைவியான செந்தி, அம்மாவாக நடித்தவர், பரம்பரை கடுக்கானை பேரனான நாயகனிடம் பரிசாகக் கொடுக்கும் தாத்தா அழகு, இன்னொரு தாத்தாவான கராத்தே வெங்கடேசன் என்று இந்தக் குடும்பம் மொத்தமுமே சிறப்பாக நடித்து, “இந்தக் குடும்பத்தை போயி இப்படி சிதைச்சுட்டீங்களேடா..?” என்று நம்மையும் கொஞ்சம் குமுற வைத்திருக்கிறார்கள்.

கோபக்கார அண்ணன் பிர்லா போஸ், சாவு என்றாலும், பிரச்சினை என்றாலும் முன்னாடி வந்து நிற்கும் அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி, ஊரில் ஏற்படும் சின்னச் சின்ன சலசலப்புக்கெல்லாம் “போச்சு.. போச்சு.. ஊர் கெட்டுக் குட்டிச்சுவராப் போச்சு” என்று புலம்பும் ‘ஹலோ’ கந்தசாமி, ஊர்ப் பெரிசான ‘சூப்பர் குட்’ சுப்ரமணி என்று பலரும் தங்களது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜே.பி.மேனின் ஒளிப்பதிவு சுமார் ரகமாக அமைந்துவிட்டது. பாடல் காட்சிகளில் மட்டுமே சிறப்பு என்று சொல்லலாம். மணி அமுதவனின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். சண்டை காட்சிகளை மிக இயல்பாக அமைத்திருக்கிறார்கள்.. பாராட்டுக்கள்..! சின்ன பட்ஜெட் திரைப்படம் என்பது படத்தின் மேக்கிங்கிலேயே தெரிகிறது..! இந்தக் கதைக்கு இது போதும் என்பதும் உண்மைதான்.

படம் பார்ப்பவர்கள் இது கற்பனை கதை என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காக படத்தின் இறுதியில் டைட்டிலில் ”இது உண்மையில் நடந்த கதை” என்றும், ”கலப்புத் திருமணம் செய்ததால் அந்த ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட பல ஜோடிகள் வேறு, வேறு ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்” என்றும் சொன்னதோடு, அந்த ஜோடிகளின் புகைப்படங்களை திரையில் காண்பித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குநர். 

இந்த 2024-லிலும் இந்தியாவில் ஜாதி பிரச்சினை அன்றாட நமது நிகழ்வுகளில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது. நிலாவுக்கு ராக்கெட் விடுவதில் இல்லை… நாட்டின் முன்னேற்றம். ஒரு நாட்டில் வாழும் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வில்லாத, ஜாதி பாகுபாடில்லாத ஒரு சமதர்ம சமூகமே, அந்த நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம். அந்த நாட்டின் சிறப்பு. அதைக் கொடுக்காத எந்த சமூகமும், நாடும் முன்னேறவே முடியாது. அதைத்தான் இந்தப் படமும் நமக்கு சொல்லியிருக்கிறது.

படம் பார்த்துவிட்டு அமைதியாகச் செல்வதைவிடவும் இந்தப் படம் சொல்லும் நீதியை கொஞ்சம் காது வழியாக மனதில் ஏற்றிக் கொண்டு அடுத்த தலைமுறையினருக்கு ஜாதி என்ற அரக்கனைக் காட்டாமல் வளர்ப்பதுதான் நாம் இந்தப் படத்தின் இயக்குநருக்கு செய்யும் மிகப் பெரிய பாராட்டாக இருக்கும்.

அரிமாபட்டி சக்திவேல் – அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்!

RATING : 4 / 5

Our Score