தமிழ்த் திரையுலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனமான எடெக்ட்ரா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது 3 படங்களைத் தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
இந்தப் புதிய படத்தில் நடிகர் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கவிருக்கிறார். இன்னமும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை ‘சலீம்’ படத்தின் இயக்குநரான நிர்மல் குமார் இயக்க உள்ளார்.
எடெக்ட்ரா நிறுவனம் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் ‘கொலையுதிர் காலம்’, ஹன்சிகா நடிப்பில் ‘மஹா’, மற்றும் நடிகர் அருண் விஜயின் ‘பாக்சர்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்தப் புதிய திரைப்படம் இந்த நிறுவனம் தயாரிக்கும் 12-வது படைப்பாகும்.
தனது முந்தைய படைப்பான ‘சலீம்’ திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இயக்குநர் நிர்மல் குமார், இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் அரவிந்த்சாமியின் நடிப்புத் திறனோடு கை கோர்க்கிறார்.
இத்திரைப்படம் பற்றி எடெக்ட்ரா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வி.மதியழகன் கூறுகையில், “இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். கதையில் நாயகன் அரவிந்த்சாமி இரண்டு லுக்கில் வருவதால் தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார். படத்தின் முதல் பார்வை மார்ச் முதல் வாரத்திலும், படப்பிடிப்பு மார்ச் இறுதியிலும் தொடங்கவுள்ளது…” என்றார்.