கடந்த ஆண்டு தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படமே இப்போது தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தை சித்தாரா எண்ட்டெர்டெயிமெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் ஆகியோர் வாங்கி வெளியிடுகின்றனர்.
பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்கெனவே தெலுங்கின் புகழ் பெற்ற பல திரைப்படங்களை ‘செல்வந்தன்’, ‘பிரபாஸ் பாகுபலி’, ‘இதுதாண்டா போலீஸ்’, ‘மகதீரா’, ‘புருஸ்லீ’, ‘எவண்டா’ என்கின்ற பெயர்களில் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறது.
இந்த ‘அனிருத்’ படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ரத்னவேலு, பாடல்கள் இசை – மிக்கி ஜே. மேயர், பின்னணி இசை – கோபி சுந்தர், படத் தொகுப்பு – கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ், பாடல்கள் – கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா, இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ், தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத், இயக்கம் – ஸ்ரீகாந்த் அடாலா, வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை ஏவி.எம். பிரிவீயூ தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பிரசாத், வசன ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, மற்றும் பாடலாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் A.R.K.ராஜராஜா பேசும்போது, “உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும் பின்னப்பட்டதுதான். அப்படி குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு, ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும்.
‘தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதைவிட மோசமான காரியம் இவ்வுலகில் வேறேதும் இல்லை’ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிதான் இந்த படத்தின் கதை.
நம் மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் நம்மை விட்டு போன பிறகு, அவர்களை நினைத்து வருத்தப்படுவோம். அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை..!
தீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகைகளில் வரும் சந்தோசம் மொத்தமாக ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடும் பார்க்க கூடிய படம் இது..” என்றார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் விரைவில் நடைபெற இருக்கிறது.